×
 

தெலுங்கானாவில் கொடிய வெப்ப அலை: 16 பேர் உயிரிழப்பு..!! அரசு இழப்பீடு அறிவிப்பு..!!

வெப்ப அலை காரணமாக உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் கோடைக்காலம் உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில், கடும் வெப்ப அலை தொடர்ந்து நிலவி வருகிறது. இதன் தாக்கத்தால் இந்த சீசனில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில வருவாய்த் துறை அமைச்சர் பொங்குலேட்டி சீனிவாச ரெட்டி தெரிவித்தார். இன்று வெப்ப அலை தொடர்பான அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்திய அமைச்சர், மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து பெறப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் இந்த உயிரிழப்பு விவரங்களை வெளியிட்டார். 

மாநிலத்தின் ஏழு மாவட்டங்களில் இந்த சோகம் பதிவாகியுள்ளது. ஜெயஷங்கர் பூபால்பள்ளி மாவட்டத்தில் மட்டும் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். வாரங்கல் அர்பன், கரீம்நகர் மற்றும் நிஜாமாபாத் மாவட்டங்களில் தலா மூன்று பேர் பலியாகியுள்ளனர். ஜோகுலாம்பா கட்வால், ரங்கா ரெட்டி மற்றும் சூர்யாபேட் மாவட்டங்களில் தலா ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான உயிரிழப்புகள் வயதானவர்கள் மற்றும் வெளிப்புற வேலை செய்பவர்களிடையே அதிகம் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெப்ப அலை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா நான்கு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த தொகை விரைவில் வழங்கப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார். மேலும், வெப்ப அலை தாக்கத்தை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகங்களுக்கு தெளிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. தெலுங்கானாவில் கடந்த சில நாட்களாக பகல் நேர வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது. சில பகுதிகளில் 47 டிகிரி வரை பதிவாகியுள்ளதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். 

இதையும் படிங்க: "HEAT STROKE"..! வெப்ப அலை முன்னெச்சரிக்கை..! சுகாதாரத்துறை அறிவுறுத்தல்..!!

அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் காரணமாக வெப்ப சோர்வு (Heat Exhaustion) மற்றும் வெப்ப பக்கவாதம் (Heat Stroke) போன்ற பிரச்னைகள் அதிகரித்துள்ளன. அரசு தரப்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பள்ளிகளுக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டும் வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கட்டுமான தளங்கள், விவசாய நிலங்கள் மற்றும் தெரு வியாபாரிகளுக்கு நடுப்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் வேலை செய்ய வேண்டாம் என்ற அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. குடிநீர், நிழல் மற்றும் முதலுதவி மையங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.

மருத்துவமனைகளில் வெப்ப அலை தொடர்பான அவசர சிகிச்சை பிரிவுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகங்கள் சமூக ஊடகங்கள், பேரூராட்சிகள் மூலம் தொடர்ச்சியாக செய்திகளைப் பரப்பி வருகின்றன. வெப்ப அலை இன்னும் சில நாட்கள் தொடரும் என வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில், மக்கள் அதிக தண்ணீர் அருந்துதல், இலேசான உணவுகள் உட்கொள்ளுதல், தேவையின்றி வெளியில் செல்லாமல் இருப்பது போன்றவற்றை கடைப்பிடிக்க வேண்டும் என அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இதையும் படிங்க: உக்கிரத்தை காட்ட தொடங்கிய வெயில்..!! ஒடிசாவில் வெப்ப தாக்கத்தால் 2 ஆசிரியர்கள் பரிதாப பலி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share