முடிச்சுவுட்டீங்க போங்க!! காலியாகும் அதிமுக கூடாரம்! இதுவரை 32 சதவீத நிர்வாகிகள் ஓட்டம்!
தென் மாவட்டங்கள் மற்றும் சென்னை மண்டலத்தில் தான், அதிக நிர்வாகிகள் த.வெ.க.,வில் இணைந்துள்ளனர்.
சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் இருந்து பெரும் அளவில் நிர்வாகிகள் வெளியேறி வரும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) அளிக்கும் சிவப்புக் கம்பள வரவேற்பு காரணமாக பலர் அக்கட்சியை நோக்கி சென்று கொண்டிருப்பதாக அதிமுக அமைப்பு செயலர்கள் தெரிவித்துள்ளனர்.
தென் மாவட்டங்கள் மற்றும் சென்னை மண்டலத்தில் இந்த இணைப்பு அதிக அளவில் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. மாவட்ட செயலர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், பேரூர், நகர, ஒன்றிய, கிளை, வார்டு செயலர்கள், பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர்கள் இதில் அடங்குவர்.
இதுவரை அதிமுகவின் மொத்த நிர்வாகிகளில் 32 சதவீதம் பேர் மாற்றுக் கட்சிகளில் இணைந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் பெரும்பாலானோர் த.வெ.க.வுக்கு சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: கடந்த 5 ஆண்டுகளில் சிக்கிய முன்னாள் அமைச்சர்கள்... யார் அந்த 4 பேர்..??
முன்பு ஒற்றைத் தலைமை விவகாரம் எழுந்தபோது, 7 சதவீத நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் சென்றனர். பின்னர் அவர்கள் பலரும் வேறு கட்சிகளில் இணைந்தனர். அப்போது வெளியேறியவர்களுக்கு பதிலாக புதிய நிர்வாகிகளை நியமித்து ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி இடையேயான பிரச்சினையை பழனிசாமி சமாளித்தார்.
ஆனால் தற்போதைய நிலைமை மிகவும் மோசமானதாக உள்ளது. 32 சதவீத நிர்வாகிகள் வெளியேறியதால் பல மாவட்டங்களில் புதிய நியமனங்கள் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், கட்சியின் உள்ளேயிருக்கும் இந்த பெரும் இழப்பை வெளிக்காட்டாமல் எடப்பாடி பழனிசாமி மவுனம் காக்கும் நிலையில் இருப்பதாக அமைப்பு செயலர்கள் தெரிவித்தனர். ஒரு காலத்தில் வலுவான அடித்தளத்துடன் இருந்த அதிமுக இப்போது தொடர் இழப்புகளை சந்தித்து வருவது கட்சியினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
த.வெ.க. தரப்பில் வரவேற்பு அதிகமாக இருப்பதால், அதிமுகவின் பழைய நிர்வாகிகள் சாரை சாரையாக இணைவது அதிகரித்துள்ளது. இந்த சூழ்நிலை எதிர்காலத்தில் அதிமுகவின் அமைப்பு வலிமையை பெரிதும் பாதிக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: விட்டு விலகிச் செல்பவர்கள் போகட்டும்! ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி ஆவேசம்! தொண்டர்களுக்கு ஆறுதல்!