எடப்பாடிபழனிசாமி மகன், மச்சான் கையில் உச்ச அதிகாரம்!! சீட்டுக்காக சுற்றி சுற்றி வரும் அதிமுகவினர்!!
தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்து விட்ட நிலையில், அதிமுக சார்பில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகள் பொதுச்செயலாளர் பழனிசாமியின் மச்சான் வெங்கடேசை சுற்றி சுற்றி வரும் தகவல் பரபரப்பாக பேசப்படுகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில், அதிமுகவில் வேட்பாளர் தேர்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியின் மச்சான் வெங்கடேஷை சுற்றி நிர்வாகிகள் சுற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுக நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது. எனவே பிப்ரவரி 24ஆம் தேதி ஜெயலலிதா பிறந்தநாளுக்கு முன்பாகவே முதல் கட்டமாக 100 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்ய பழனிசாமி தீவிரம் காட்டி வருகிறார்.
ஜெயலலிதா இருந்த காலத்தில் மன்னார்குடி குடும்பத்தினர் தேர்வு செய்தவர்களே வேட்பாளர்களாக இடம்பெற்றனர். ஆனால் 2021 தேர்தலில் கூட மாவட்ட செயலாளர்களின் பரிந்துரைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
இதையும் படிங்க: அதிமுக தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு?!! சாத்தியமா? வேணாமா? எடப்பாடி தீவிர டிஸ்கஷன்!
இம்முறை எல்லாமே தலைகீழாக மாறியுள்ளது. பழனிசாமியின் மச்சான் வெங்கடேஷ் மற்றும் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தான் வேட்பாளர் தேர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்கள் தேர்வு செய்தவர்களின் பட்டியல் பழனிசாமியின் மகன் மிதுன் கைக்கு செல்கிறது. மிதுன் காட்டும் விரல்களே இறுதியாக வேட்பாளர்களாக தேர்வாக உள்ளனர்.
நிர்வாகிகளுக்கு மிதுனை நேரடியாக சந்திக்க வாய்ப்பில்லை. எனவே வெங்கடேஷ் மற்றும் இளங்கோவனை சுற்றி வருகின்றனர். இதற்காக சேலம் நெடுஞ்சாலை நகரில் ஒரு தற்காலிக அலுவலகமும், சென்னை மியூசிக் அகாடமி அருகே உள்ள ஒரு ஓட்டலிலும் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. அங்கு சீட் கேட்டு பல நிர்வாகிகள் தவம் கிடக்கின்றனர் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் கட்சியின் பழைய நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது. மாவட்ட செயலாளர்களின் பரிந்துரைக்கு மதிப்பு இல்லாமல், ஒரு சிலரின் கையில் தேர்வு சென்றுள்ளது என்ற விமர்சனம் வலுத்து வருகிறது. பழனிசாமி தரப்பு இதை மறுக்கவில்லை என்றாலும், வேட்பாளர் தேர்வு முழுமையாக அவரது கட்டுப்பாட்டில் இருப்பதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
ஜெயலலிதா பிறந்தநாள் அருகில் வரும் நிலையில், முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதிமுகவில் இப்போது நடக்கும் இந்த உள் நகர்வுகள் 2026 தேர்தல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கட்சியினர் கருதுகின்றனர்.
திமுகவுக்கு எதிரான வலுவான அணியை உருவாக்க பழனிசாமி தீவிரம் காட்டி வரும் நிலையில், வேட்பாளர் தேர்வு சர்ச்சை கட்சிக்குள் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அதிமுகவில் இணைப்பு சாத்தியமா? கறார் காட்டும் பழனிசாமி! ட்விஸ்ட் வைத்த ஓபிஎஸ்!!