×
 

அமித் ஷா போட்ட திடீர் ‘டெட்லைன்’! எதிர்க்கட்சிகளுக்கு செக்... பார்லி.,யில் உச்சகட்ட பரபரப்பு!

லோக்சபா, ராஜ்யசபாவில் எந்த அலுவல்களும் நடக்காததால், மக்களின் கோடிக்கணக்கான வரிப்பணம் வீணாகிறது.

புதுடில்லி: பார்லிமென்டில் மாணவர்கள் போராட்டம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க, எதிர்க்கட்சிகள் முதலில் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் முறைப்படி கடிதம் அளிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். விவாதம் தொடங்கினால், எதிர்க்கட்சிகள் எழுப்பும் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20ம் தேதி தொடங்கிய நிலையில், இன்று நிறைவடைகிறது. தொடக்கம் முதலே மாணவர்கள் போராட்டம், போலீஸ் நடவடிக்கை, பெல்லட் குண்டு பயன்பாடு, அயோத்தி ராமர் கோவில் நன்கொடை தொடர்பான குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் லோக்சபா மற்றும் ராஜ்யசபா நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆளும் தரப்பு குற்றம்சாட்டுகிறது.

இந்நிலையில், பார்லிமென்ட் வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமித் ஷா, விவாதம் நடத்துவதற்கு அரசு தயாராக இருப்பதாக தெரிவித்தார். குறிப்பாக, மாணவர்கள் போராட்டம் உள்ளிட்ட விவகாரங்களை விவாதிக்க சபாநாயகரிடம் முறையான கோரிக்கை அளிக்க வேண்டும் என்றும், அதன்பின் விவாதம் தொடங்கினால் அனைத்து கேள்விகளுக்கும் பொறுமையாக பதிலளிப்பேன் என்றும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: டெல்லி வரை சென்ற குதிரை பேர விவகாரம்! அமித் ஷாவிடம் பழனிசாமி வைத்த பரபரப்பு குற்றச்சாட்டு

மேலும், இன்று பிற்பகல் 3 மணி வரை கூட விவாதத்திற்கு தயாராக இருப்பதாக அமித் ஷா தெரிவித்தார். விவாதம் நடத்த வேண்டுமா அல்லது தொடர்ந்து அமளியில் ஈடுபட வேண்டுமா என்பதை எதிர்க்கட்சிகளே முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் சவால் விடுத்தார்.

தான் பார்லிமென்டுக்கு வருவதில்லை என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தையும் அமித் ஷா மறுத்தார். கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் தினமும் பார்லிமென்டுக்கு வந்து வருவதாகவும், தனது அறையில் இருந்து இரு சபைகளின் நடவடிக்கைகளையும் கவனித்து வருவதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.

இதற்கிடையே, மாணவர்கள் மீது நடத்தப்பட்ட போலீஸ் நடவடிக்கை குறித்து விவாதிக்க அரசு தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு ஏற்கனவே தெரிவித்ததாகவும் அமித் ஷா குறிப்பிட்டார்.

ஆனால், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், அமித் ஷாவின் விளக்கத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். மாணவர்கள் மீது பெல்லட் குண்டுகள் பயன்படுத்த உத்தரவிட்டது யார் என்பதை அமித் ஷா தெளிவுபடுத்த வேண்டும் என்றும், அதற்கு பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும் என்றும் ராகுல் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையே, எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை திருத்த மசோதா 2026 லோக்சபாவில் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதனால் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று பார்லிமென்டில் மீண்டும் கடும் அரசியல் மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

இதையும் படிங்க: அமித்ஷா விழாவில் பரபரப்பு... அணிவகுப்பின்போது பெண் காவலர்கள் உட்பட 10 பேர் மயக்கம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share