2வது குழந்தை பெத்துக்கோங்க.. ரூ.25,000 நிதியுதவியாம்..!! வெளியான அதிரடி அறிவிப்பு!! எங்க தெரியுமா..??
2வது குழந்தை பெற்றுக்கொண்டால் ரூ.25,000 நிதியுதவி வழங்கப்படும் என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
இந்தியா தற்போது உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ளது. ஆனால், விரைவில் வயதானவர்கள் எண்ணிக்கை அதிகரித்து, முதியோர் ஆதிக்க நாடாக மாறும் அபாயம் உள்ளது. வேலைவாய்ப்பு பற்றாக்குறை, நிதி சுமை, தாமதமான திருமணம் போன்ற பல காரணங்களால் பல தம்பதிகள் ஒரு குழந்தை போதும் என்ற முடிவுக்கு வருகின்றனர். குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களில் கருவுறுதல் விகிதம் (Total Fertility Rate - TFR) கணிசமாகக் குறைந்து வருகிறது.
வட மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தென் மாநிலங்களில் இது மிகக் குறைவாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே இந்தப் போக்கு தொடர்கிறது. இதனால் ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடுவும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் கவலை தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு நிகழ்ச்சி ஒன்றில் சந்திரபாபு நாயுடு பேசுகையில், தென்னிந்தியாவில் கருவுறுதல் விகிதம் குறைந்து வருவதாகவும், பல கிராமங்களில் வயதானவர்கள் மட்டுமே இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
தென் மாநிலங்களில் TFR 1.6 ஆகக் குறைந்துள்ளது என்றும், இது தேசிய சராசரியான 2.1-ஐ விடக் குறைவு என்றும் தெரிவித்தார். 2047ஆம் ஆண்டு வரை மக்கள் தொகை பலன் கிடைக்கும் என்றாலும், அதன்பின் இளைஞர்களை விட வயதானவர்கள் அதிகமாக இருப்பர் என்று எச்சரித்தார். இந்தச் சூழலில், ஆந்திர அரசு முக்கியமான முடிவு எடுத்துள்ளது. மாநில சட்டப்பேரவையில் சந்திரபாபு நாயுடு அறிவித்தபடி, மாநிலத்தில் தற்போது 1.5 ஆக உள்ள கருவுறுதல் விகிதத்தை 2.1 ஆக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்தியாவிலேயே முதல் முறையாக ‘மக்கள் தொகை மேலாண்மை கொள்கை’ (Population Management Policy) வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆந்திராவுக்கு விசிட் அடித்த பில் கேட்ஸ்..!! சந்திரபாபு நாயுடுவுடன் முக்கிய சந்திப்பு..!! என்ன தெரியுமா..??
இந்த வரைவுக் கொள்கையின்படி, இரண்டாவது குழந்தை பெற்ற தம்பதிகளுக்கு பிரசவ நேரத்தில் ரூ.25,000 நிதியுதவி வழங்கப்படும். மூன்றாவது குழந்தைக்கு ரூ.25,000 உடனடி உதவியுடன், குழந்தை 5 வயது வரை மாதம் ரூ.1,000 ஊட்டச்சத்து உதவி, 18 வயது வரை இலவசக் கல்வி வழங்கப்படும். இது ‘போஷனா-சிக்ஷா-சுரக்ஷா’ தொகுப்பின் கீழ் செயல்படுத்தப்படும். மேலும், கருவுறுதல் சிகிச்சை மையங்கள் பொது-தனியார் கூட்டுறவில் அமைக்கப்படும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு ஓராண்டு வரை நீட்டிக்கப்படலாம். தந்தைக்கு 2 மாத விடுப்பு, மூன்றாவது குழந்தை பெற்ற அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியத்துக்கு முன் சிறப்பு விடுப்பு மற்றும் ரூ.50,000 சுகாதார நிதி போன்றவையும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இளம் பெண்களிடையே கர்ப்ப விகிதத்தைக் குறைப்பது, தேவையற்ற சிசேரியன் அறுவை சிகிச்சைகளைக் கட்டுப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளும் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த வரைவுக் கொள்கை மீது பொதுமக்கள் 30 நாட்களுக்கு கருத்துகளைத் தெரிவிக்கலாம். அதன்பின் தேவையான மாற்றங்களுடன் இறுதி செய்யப்பட்டு, ஏப்ரல் மாதம் முதல் அமல்படுத்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்தக் கொள்கை தென்னிந்தியாவில் ஏற்படும் முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பு சவாலை எதிர்கொள்ளும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: வந்தாச்சு ராஜ்யசபா எலெக்ஷன்... வேட்பு மனுக்கள் பரிசீலனை தீவிரம்..!!