×
 

ஸ்லீப்பர் கோச் பஸ்களுக்கு தடை விதிக்க திட்டம்!! ஆந்திர அரசு தீவிர ஆலோசனை!

ஆந்திராவில், 'ஸ்லீப்பர்' எனப்படும் படுக்கை வசதி கொண்ட தனியார் ஆம்னி பஸ்களுக்கு தடை விதிப்பது குறித்து அம்மாநில அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தில் பயணிகள் பாதுகாப்பு கருதி, ‘ஸ்லீப்பர்’ எனப்படும் படுக்கை வசதி கொண்ட தனியார் ஆம்னி பஸ்களுக்கு தடை விதிப்பது குறித்து மாநில அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், சாலை பாதுகாப்பு மற்றும் தனியார் பஸ்கள் அடிக்கடி விபத்தில் சிக்கும் பிரச்னை விரிவாக விவாதிக்கப்பட்டது. போக்குவரத்து அமைச்சர் மண்டிபள்ளி ராம்பிரசாத் ரெட்டி மற்றும் உள்துறை அமைச்சர் வங்காலபுடி அனிதா உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

அதிகாரிகள் தெரிவித்தபடி, பல தனியார் ஆம்னி பஸ்கள் லாரி சேஸிஸை வாங்கி, அதன் மீது சட்டவிரோதமாக பஸ் கூண்டு கட்டி இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் அவசர வெளியேற்ற வழிகள் இல்லாததால், தீ விபத்து ஏற்பட்டால் பயணிகள் தப்பிக்க முடியாத நிலை உள்ளது. முறையான பாதுகாப்பு விதிகளின்படி கட்டப்படாத இந்த ‘ஸ்லீப்பர்’ பஸ்களுக்கு தடை விதிப்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.

இதையும் படிங்க: ஆந்திரா தலைநகராக அமராவதியை அங்கீகரிக்கும் சட்ட மசோதா!! பார்லிமென்டில் இன்று அறிமுகம்!!

போக்குவரத்து அமைச்சர் மண்டிபள்ளி ராம்பிரசாத் ரெட்டி கூறுகையில், “முதற்கட்டமாக சட்டவிரோதமாக கட்டப்பட்ட ஸ்லீப்பர் பஸ்களுக்கு தடை விதிப்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம். பயணிகள் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத இந்த பஸ்களை முழுமையாக தடை செய்வதா அல்லது கட்டுப்பாடுகள் விதிப்பதா என்பது குறித்து மத்திய அரசும் முடிவெடுக்க வேண்டும்” என்றார்.

தடை குறித்த இறுதி முடிவு எடுக்கப்படாவிட்டாலும், அரசு ஏற்கனவே பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தத் தொடங்கியுள்ளது. 300 கிலோமீட்டருக்கு மேல் இயக்கப்படும் தனியார் ஆம்னி பஸ்களில் இரு டிரைவர்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என புதிய விதி கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும், முக்கிய சாலைகளில் வேகத்தை கண்காணிக்கும் ‘ஸ்பீட் கன்’ பொருத்த அரசு 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. தனியார் பஸ்களில் டிரைவர் விழிப்புணர்வுடன் இருக்கிறாரா என்பதை கண்காணிக்க தனித்தனியாக இரு கேமராக்கள் பொருத்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது. அதிவேகத்தில் செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க தொழில்நுட்ப உதவியுடன் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஆந்திராவில் சாலை விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், அரசின் இந்த நடவடிக்கைகள் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ஆந்திரா, தெலுங்கானாவில் தலையெடுக்கும் போதை கலாசாரம்!! திணறும் ஆட்சியாளர்கள்! முதல்வர்கள் தீவிர ஆலோசனை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share