வழிவிட்ட ஹார்முஸ் ஜலசந்தி..!! இந்தியா வரும் மேலும் 20 எரிபொருள் கப்பல்கள்..!! பெரும் நிவாரணம்..!!
மேலும் 22 கப்பல்கள் இந்தியா வருவதற்காக ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து வரும் நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஈரான் மீதான போர் காரணமாக வளைகுடா பகுதியில் எரிபொருள் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. உலகின் மிக முக்கியமான எண்ணெய் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தற்காலிகமாக மூடியதால், பல நாடுகளுக்கு எரிபொருள் விநியோகம் தடைபட்டது. இதனால் உலக சந்தையில் எண்ணெய் விலை உயர்ந்ததுடன், இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் எரிவாயு மற்றும் சமையல் எரிவாயு (எல்பிஜி) பற்றாக்குறை ஏற்பட்டது.
இந்நிலையில், இருதரப்பு இராஜதந்திர உரையாடல்களுக்குப் பிறகு, ஈரான் அத்தியாவசிய தேவைகளுக்காக ஜலசந்தியை தேர்ந்தெடுக்கப்பட்ட கப்பல்களுக்கு திறந்துள்ளது. இதன் விளைவாக, இந்தியாவுக்கு ஏற்கனவே இரண்டு இந்தியக் கொடி கொண்ட எல்பிஜி கப்பல்கள் (ஷிவாலிக் மற்றும் நந்தா தேவி) பாதுகாப்பாக கடந்து வந்தன. இவற்றில் சுமார் 97,000 டன் எல்பிஜி இறக்கப்பட்டு, உள்நாட்டு தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டது. மேலும் மூன்றாவதாக ஜக் லட்கி என்ற கப்பலும் குஜராத் வந்தடைந்தது. இது இந்தியாவில் சமையல் எரிவாயு பற்றாக்குறையை ஓரளவு குறைக்க உதவியது.
இதையும் படிங்க: ஹோர்முஸ் நீரிணை..!! இந்திய கப்பல்களுக்கு அனுமதி... கிரீன் சிக்னல் காட்டிய ஈரான்..!!
தற்போது, மேலும் நிவாரணம் கிடைக்கும் வகையில், ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து இந்தியா நோக்கி 22 கப்பல்கள் வரும் நிலையில் உள்ளன என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இவற்றில் 20 கப்பல்கள் எரிபொருள் ஏற்றியவை. இக்கப்பல்களில் சுமார் 2.15 லட்சம் டன் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (எல்என்ஜி), 3.21 லட்சம் டன் எல்பிஜி மற்றும் 16.76 லட்சம் டன் கச்சா எண்ணெய் ஆகியவை உள்ளன. இவை இந்தியாவின் எரிசக்தி தேவைகளை பெருமளவு நிவர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த 20 எரிபொருள் கப்பல்களில் 10 கப்பல்கள் இந்தியக் கொடியை ஏற்றியவை. மீதமுள்ளவை மார்ஷல் தீவுகள், லைபீரியா, கிரீஸ், மால்டா மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளின் கொடிகளை கொண்டவை. மேலும், இந்தியக் கொடி கொண்ட இரண்டு கொள்கலன் கப்பல்களும் ஜலசந்தியை கடந்து வெளியேறி வருகின்றன. இந்திய கடற்படை இக்கப்பல்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்குவதற்காக கப்பல்களை அனுப்பியுள்ளது.
இருப்பினும், ஜலசந்தி முழுமையாக திறக்கப்படவில்லை என்பதால், சில கப்பல்கள் இன்னும் காத்திருப்பில் உள்ளன. இந்திய அரசு ஈரானுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி, மீதமுள்ள கப்பல்களுக்கும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய முயல்கிறது. இதனால், இந்தியாவின் எரிபொருள் இருப்பு விரைவில் மேம்படும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.
இதையும் படிங்க: உலக பொருளாதாரத்திற்கு ஆபத்து! பெயரை குறிப்பிடாமல் இஸ்ரேல் - ஈரான் மோதலை சாடிய இந்தியா!