ஆடைக்குள் மறைத்து வைத்து நடந்த அசிங்கம்... அயோத்தி ராமர் கோயிலில் அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி...!
அயோத்தி ராமர் கோயில் காணிக்கை விவகாரம் திட்டமிட்ட கொள்ளை என முன்னாள் டிஜிபி குற்றச்சாட்டு
அயோத்தி ராமர் கோயிலில் நடைபெற்றதாகக் கூறப்படும் காணிக்கை கொள்ளை சம்பவம் தொடர்பாக உத்தரப் பிரதேச முன்னாள் டிஜிபி பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ராமர் கோயிலில் நடைபெற்றிருப்பது திட்டமிட்ட கொள்ளை என்றும், தற்போது வெளிவந்துள்ள தகவல்கள் மலையளவு கொள்ளையின் நுனியளவு மட்டுமே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ராமர் கோயில் காணிக்கை கொள்ளை விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு (SIT) ஆய்வு மேற்கொண்டுள்ளது. அந்த விசாரணையின் ஒரு பகுதியாக, ஏப்ரல் 27 முதல் ஜூன் 5 வரை பதிவான சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டதில் பல பரபரப்பான தகவல்கள் வெளிவந்துள்ளதாக கூறப்படுகிறது.
சிசிடிவி காட்சிகளில், காணிக்கை பணத்தை சிலர் கால்சட்டை பைகளிலும், காலணிகளுக்குள்ளும் மறைத்து எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. மேலும், காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டவர்கள் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகளை மறைத்து எடுத்துச் சென்ற காட்சிகளும் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: திமுகவுக்கு விழுந்த சாட்டையடி... டெல்லி வரை சென்றும் சறுக்கல்... உற்சாகத்தில் துள்ளி குதிக்கும் வைகோ...!
38 நாட்கள் ஆய்வு செய்யப்பட்டதில், சுமார் 70 முறை பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என்றும், இது மலையளவு கொள்ளையாக இருந்தாலும் தற்போது அதன் ஒரு சிறிய பகுதி மட்டுமே அம்பலமாகியுள்ளதாகவும் முன்னாள் டிஜிபி குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், கும்பாபிஷேக (குடமுழுக்கு) காலத்தில் பக்தர்கள் வழங்கிய நன்கொடைகளில் பெரும்பகுதி கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோயிலில் எண்ணப்பட்ட காணிக்கைத் தொகைக்கும், வங்கியில் செலுத்தப்பட்ட தொகைக்கும் இடையே கணிசமான வேறுபாடு இருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்கிய காலத்திலிருந்தே பல்வேறு முறைகேடுகள் மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றிருக்கலாம் என்றும், அவை தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் முன்னாள் டிஜிபி வலியுறுத்தியுள்ளார்.
அயோத்தி ராமர் கோயில் உண்டியல் காணிக்கை திருட்டு விவகாரத்தில் சிசிடிவி காட்சிகள் மூலம் பல்வேறு முக்கிய தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில், இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: நலம் AI APP..! வீட்டிலிருந்தே முன்பதிவு..! செயலியை தொடங்கி வைத்த அமைச்சர் அருண்ராஜ்..!!