×
 

காங்கிரஸ் கேட்டதால் பதவி விலகினேன்.. சட்டசபைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் பசவராஜ் ஹொரட்டி!!

பசவராஜ் ஹொரட்டி ராஜினாமாவை காங்கிரஸ் மேலிடம் கோரியதாக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் அவரிடம் தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்ட மேலவையின் தலைவராக இருந்த மூத்த அரசியல்வாதி பசவராஜ் ஹொரட்டி, ஆளும் காங்கிரஸ் கட்சியின் வற்புறுத்தலை ஏற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இன்று இந்த முடிவை அறிவித்த அவர், செய்தியாளர்களிடம் பேசும்போது, ஆளும் கட்சி தான் பதவி விலக வேண்டும் என்று விரும்புவதாகத் தெரிவித்தார்.

முதலமைச்சர் டி.கே. சிவகுமார் அவருடன் தொலைபேசியில் இருமுறை பேசியதாகவும், பின்னர் நேரில் சந்தித்து கட்சியின் மேலிடம் பதவி விலகுமாறு உத்தரவிட்டதாகவும் ஹொரட்டி விளக்கினார். பதவி விலகாவிட்டால் தனக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படும் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இந்த நிகழ்வுகளால் தான் மிகுந்த வேதனை அடைந்ததாகக் கூறிய ஹொரட்டி, தாம் மரியாதையுடன் பதவி விலக விரும்பி ஆகஸ்ட் 14 அன்று ராஜினாமா செய்யத் திட்டமிட்டிருந்ததாகத் தெரிவித்தார். ஆனால் கட்சியின் அழுத்தம் காரணமாக முன்கூட்டியே முடிவு எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாக அவர் வருத்தம் தெரிவித்தார்.

மேலும், சட்ட மேலவைத் தலைவரையும் சட்டமன்ற சபாநாயகரையும் தேர்ந்தெடுப்பது சபையின் தனிப்பட்ட உரிமை என்றும், அது கட்சியின் மேலிடத் தலைமையின் உரிமையல்ல என்றும் அவர் வலியுறுத்தினார். இது சட்டமன்ற மரபுகள் மற்றும் ஜனநாயக நெறிமுறைகளுக்கு முரணானது என்பதைச் சுட்டிக்காட்டினார். 1956 முதல் இன்றுவரை மேலவைத் தலைவர்கள் தங்கள் பதவிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்துள்ளனர்; அரசு மாற்றத்திற்குப் பின்னரும் தலைவர் பதவி மாற்றப்படவில்லை என்றும் அவர் நினைவுபடுத்தினார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம்! ராகுல் காந்தி எச்சரிக்கை!

ஹொரட்டி 1980 முதல் தொடர்ந்து எட்டு முறை மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனுபவசாலி. தற்போதைய பதவிக்காலம் 2028 ஜூலை வரை நீடிக்கும். காங்கிரஸ் கட்சி அடுத்த தலைவராக சலீம் அகமதுவையும், துணைத் தலைவராக உமாஸ்ரீயையும் பரிந்துரைத்துள்ளது. ஹொரட்டி ஆகஸ்ட் 13 அன்று மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளை நடத்திவிட்டு, 14 அன்று அதிகாரப்பூர்வமாக விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் தொடர்ந்து மேலவை உறுப்பினராக இருக்கவுள்ளார்.

இந்த ராஜினாமா, கர்நாடக அரசியலில் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையேயான உறவுகளில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளது. சபை உறுப்பினர்களின் சுயாதீன உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அவரது கருத்து, அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
 

இதையும் படிங்க: மக்கள் பணம் எங்கே.? பிரதமர் மோடிக்கு மாணிக்கம் தாகூர் சரமாரி கேள்வி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share