கேஸ் தட்டுப்பாடா? 47,000 டன் எல்.பி.ஜி உடன் குஜராத் வந்தது இந்திய கப்பல் நந்தா தேவி!
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எல்பிஜி டாங்கர் கப்பல் நந்தா தேவி குஜராத்தின் வதினார் துறைமுகத்தை வந்தடைந்தது.
குஜராத்: மத்திய கிழக்கில் அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி டேங்கர் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனால் உலகளாவிய எல்பிஜி விநியோகத்தில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில், இந்தியாவுக்கு மிகுந்த நிவாரணமாக, இந்தியக் கொடியுடன் சென்ற 'நந்தா தேவி' எல்பிஜி டேங்கர் கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாகக் கடந்து, குஜராத்தின் வதினார் துறைமுகத்தை மார்ச் 17 அன்று வந்தடைந்தது.
இது இரண்டாவது இந்திய எல்பிஜி கப்பலாகும். முதலாவதாக 'ஷிவாலிக்' எல்பிஜி டேங்கர் மார்ச் 16 அன்று குஜராத்தின் முந்தரா துறைமுகத்தை சென்றடைந்தது. இரு கப்பல்களுக்கும் ஈரான் அதிகாரிகள் சிறப்பு அனுமதி வழங்கியிருந்தனர். இதற்கு இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ஷியுடன் நடத்திய பேச்சுவார்த்தை முக்கிய காரணமாக அமைந்தது. இந்திய கடற்படை, ஈரான் கடற்படை ஆகியவை தேவையான உதவிகளை வழங்கின.
இதையும் படிங்க: பிரதமர் மோடியே பீதியில இருக்காரு! மக்களை பயப்பட வேணாம்னு சொல்றாரு! ராகுல்காந்தி கிண்டல்!
நந்தா தேவி கப்பல் கத்தாரிலிருந்து புறப்பட்டு, சுமார் 46,500 முதல் 47,000 மெட்ரிக் டன் எல்பிஜியை ஏற்றி வந்துள்ளது. துறைமுகத்தில் ஷிப்-டு-ஷிப் (STS) மாற்று முறையில் MT BW Birch கப்பலுக்கு மாற்றப்பட உள்ளது. பின்னர் இது காண்ட்லா துறைமுகத்தை நோக்கி சென்று விநியோகிக்கப்படும்.
கப்பலின் தலைமை அதிகாரிகள் கூறுகையில், “ஹார்முஸ் ஜலசந்தியைக் கடப்பதற்கு இந்திய மற்றும் ஈரான் கடற்படைகள், துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து அமைச்சகம், இந்திய கப்பல் கழகம் ஆகியவை ஒருங்கிணைந்து முயற்சி மேற்கொண்டன.
மேற்கு ஆசிய மோதலால் உலகளாவிய எல்பிஜி நெருக்கடி ஏற்பட்டுள்ள இக்காலத்தில், இந்த 47,000 மெட்ரிக் டன் எல்பிஜி இந்தியாவுக்கு பெரும் உதவியாக அமையும். ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி. எதிர்காலத்திலும் தொடர்ந்து எல்பிஜி விநியோகம் செய்வோம்” என்றனர்.
இந்தியாவில் எல்பிஜி சிலிண்டர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், இந்த இரு கப்பல்களின் வருகை பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி உலகின் மிக முக்கியமான எரிசக்தி வழித்தடம் என்பதால், இந்தியாவின் இந்த வெற்றிகரமான முயற்சி இராஜதந்திர வெற்றியாகவும் பார்க்கப்படுகிறது. மேலும் இதுபோன்ற கப்பல்கள் வருவதால் எல்பிஜி விலை உயர்வு கட்டுப்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதையும் படிங்க: 20 நாளைக்கு பிரச்னை இல்லை!! கேஸ் சிலிண்டர் கையிருப்பு உள்ளது!! தமிழக அரசு விளக்கம்!