படைத்தவனுக்கும் படைப்புக்கும் இடையே பாகுபாடு இருக்குமா? சபரிமலை விவகாரத்தில் நீதிபதிகள் நறுக் கேள்வி!
படைத்தவனுக்கும், அவனது படைப்புக்கும் இடையே பாகுபாடு இருக்க முடியுமா?' என, சபரிமலை அய்யப்பன் கோவில் தலைமை தந்திரியிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
உச்சநீதி மன்றத்தில் (Supreme Court of India) சபரிமலை தொடர்பான வழக்கில் நேற்று நடைபெற்ற விசாரணை தீவிரமான விவாதங்களுக்கு வழிவகுத்தது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் (Sabarimala Ayyappa Temple) அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டுமா என்ற கேள்வியை மையமாகக் கொண்டு, அரசியல் சாசன உரிமைகள் மற்றும் மத சுதந்திரம் குறித்து ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி வருகிறது.
விசாரணையின் போது, கோவில் தலைமை தந்திரி சார்பில் மூத்த வழக்கறிஞர் வி.கிரி வாதாடினார். அவர், “ஒரு பக்தர் கோவிலுக்கு செல்வது தெய்வத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டு வழிபடுவதற்காகத்தான். அந்த தெய்வத்தின் இயல்புகளையும், சடங்குகளையும் அவர் மதிக்க வேண்டியது அவசியம்” என்று தெரிவித்தார். குறிப்பாக, சபரிமலையில் உள்ள தெய்வம் நைஷ்டிக பிரம்மச்சரியத்தை கடைப்பிடிப்பதாக நம்பப்படுவதால், அதற்கேற்றபடி வழிபாட்டு முறைகள் அமைகின்றன என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த நீதிபதி அமானுல்லா (Justice Amanullah) முக்கியமான கேள்விகளை எழுப்பினார். “கடவுள் தான் மனிதனை படைத்தார் என்ற நம்பிக்கையுடன் ஒரு பக்தர் கோவிலுக்கு செல்கிறார்.
இதையும் படிங்க: சபரிமலை முறைகேடு குறித்து பிரதமர் மோடி ஏன் பேசலை!! ஓட்டு கிடைக்கும்னா மட்டுமே பேசுவாரா? ராகுல்காந்தி கேள்வி?
ஆனால், பிறப்பின் அடிப்படையில் அவருக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமானால், அந்த பக்தரை பாதுகாக்க அரசியல் சாசனம் முன்வராதா? படைத்தவனுக்கும், அவன் படைப்புக்கும் இடையில் பாகுபாடு இருக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார். இந்த கேள்விகள் நீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தின.
மேலும், மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம் (Gopal Subramanium) தனது வாதத்தில், மத அமைப்புகளுக்கு தங்கள் வழிபாட்டு முறைகளை நிர்வகிக்கும் உரிமை அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். அரசியல் சாசனத்தின் பிரிவு 25 மற்றும் 26-ன் கீழ், மத சுதந்திரம் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அந்த மதத்தின் நம்பிக்கைகள் மற்றும் சடங்குகளை பாதுகாக்கும் உரிமையும் உள்ளது என்றார்.
அதே நேரத்தில், சமத்துவம் மற்றும் மத சுதந்திரம் இடையே சமநிலை காக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டது. நீதிமன்றம் ஒரு மதத்தின் சடங்குகள் சரியா தவறா என்று தீர்மானிப்பது சிக்கலான விஷயம் என்றும், அதற்கான அதிகாரம் மத அமைப்புகளிடமே இருக்க வேண்டும் என்றும் வாதிக்கப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மத உரிமைகள் மற்றும் அரசியல் சாசன சட்டம் இடையே உள்ள நுணுக்கமான சமநிலை குறித்து நாடு முழுவதும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மோசடி கணக்குகள்!! அனில் அம்பானிக்கு மேலும் பின்னடைவு! ஷாக் கொடுத்த உச்ச நீதிமன்றம்!!