×
 

“தினமும் 1 டிஎம்சி திறங்க!” கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்று குழு அதிரடி பரிந்துரை

காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 139வது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்தில் கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் பிரதிநிதிகள் நேரடியாக பங்கேற்றனர்.

புதுடெல்லி: காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு தினமும் 1 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடகாவுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிலுவை நீரை திறக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு மத்தியில் இந்த பரிந்துரை வெளியாகியுள்ளது.

தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே காவிரி நீர் பங்கீடு ஒவ்வொரு ஆண்டும் முக்கிய அரசியல் மற்றும் விவசாய பிரச்னையாக மாறி வருகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழு அமைக்கப்பட்டுள்ளன. இரு மாநிலங்களுக்கு இடையே நீர் பங்கீடு தொடர்பாக பிரச்னை ஏற்படும் போதெல்லாம், இந்த அமைப்புகள் ஆலோசனை நடத்தி நீர் திறப்பு தொடர்பான பரிந்துரைகள் மற்றும் உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றன.

இந்த நிலையில், காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 139வது கூட்டம் டில்லியில் நடைபெற்றது. கூட்டத்தில் கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் பிரதிநிதிகள் நேரடியாக பங்கேற்றனர். தமிழக அரசு சார்பில் அதிகாரிகள் காணொலி வாயிலாக கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: காவிரி நீர் விவகாரம்! உச்சநீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு! 13ம் தேதி முக்கிய விசாரணை!

கூட்டத்தில், ஆகஸ்ட் மாதத்துக்காக தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 45.5 டிஎம்சி காவிரி நீரையும், முந்தைய மாதங்களில் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள நீரையும் கர்நாடகா திறக்க வேண்டும் என தமிழக அதிகாரிகள் வலியுறுத்தினர்.

இதனை தொடர்ந்து, தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு காவிரியில் இருந்து தினமும் 1 டிஎம்சி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடகாவுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. 15 நாட்களுக்கு தினமும் 1 டிஎம்சி என்ற அடிப்படையில் மொத்தம் 15 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

முன்னதாக, கடந்த ஜூலை மாதத்திலும் தமிழகத்திற்கு தினமும் 3,500 கன அடி வீதம் 15 நாட்களுக்கு காவிரி நீரை திறக்க வேண்டும் என ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்திருந்தது. ஆனால், அந்த பரிந்துரையின்படி கர்நாடகா தண்ணீர் திறக்கவில்லை என தமிழக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. பின்னர் கர்நாடகாவில் கனமழை பெய்ததை தொடர்ந்து, அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டது.

இத்தகைய சூழலில் தற்போது தினமும் 1 டிஎம்சி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்திருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதிகளில் சாகுபடி பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த நீர் திறப்பு விவசாயிகளுக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

எனினும், ஒழுங்காற்று குழுவின் பரிந்துரை மட்டும் போதுமானதல்ல. இதன் அடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையம் அடுத்தகட்டமாக உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும். அந்த உத்தரவு வெளியான பின்னர் கர்நாடகா எவ்வாறு செயல்படுகிறது என்பதே அடுத்த முக்கிய கட்டமாக இருக்கும்.

இதையும் படிங்க: காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் அவசர அனைத்துக்கட்சி கூட்டம்... எடுக்கப்பட்ட முக்கிய முடிவு என்ன?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share