RAW-வின் புதிய தலைவரானார் பராக் ஜெயின்... யார் இவர்? பதவி காலம் என்ன?
RAW உளவுப்பிரின் அடுத்த செயலாளராக பராக் ஜெயினை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவுக்கு எதிராக வெளிநாடுகள் போடும் திட்டம், நம் நாட்டில் சதிவேலைகளை அரங்கேற்றிவிட்டு வெளிநாடுகளில் வசிக்கும் நபர்களின் இருப்பிடம் உள்ளிட்ட விவரங்களை மத்திய அரசுக்கு RAW உளவுத்துறை அளித்து வருகிறது. இந்த பிரிவின் தலைவராக இருக்கும் ரவி சின்ஹாவின் பதவிக்காலம் ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதையடுத்து மத்திய அரசு RAW உளவுபிரிவின் புதிய தலைவரை தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டது. அதன்படி RAW பிரிவின் தலைவராக பராக் ஜெயின் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. RAW பிரிவில் செயலாளர் தான் தலைமை பொறுப்பில் உள்ள பதவி என்பதால் பராக் ஜெயின் RAW பிரிவின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஜூலை 1 ஆம் தேதி முதல் அடுத்த 2 ஆண்டுகள் வரை அந்த பொறுப்பில் இருப்பார். பராக் ஜெயின் ஒரு ஐபிஎஸ் அதிகாரி. 1989 ம் ஆண்டு பஞ்சாப் கேடரை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான இவர் கடந்த 10 ஆண்டுகளாக உளவுத்துறை மற்றும் வெளிநாடுகளில் பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டவர். இவர் உளவுத்துறையில் ‛Super Sleuth' என அழைக்கப்பட்டு வருகிறது. அதாவது ‛நன்கு துப்பறிபவர்' என்று சொல்வார்கள்.
இதையும் படிங்க: நிலத்தடி நீருக்கு வரி.. மத்திய அரசு இந்த முடிவை கைவிடணும்.. டிடிவி தினகரன் வலியுறுத்தல்..!
சமீபத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு எதிராக ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை நம் நாடு மேற்கொண்டது. இந்த ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலமாக பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்கள், விமான தளம், ராணுவ தளம் என்று 12 இடங்கள் அழிக்கப்பட்டன. இந்த வெற்றிகரமான, ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு பராக் ஜெயினும் முக்கிய காரணமாகும். இவர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து வழங்கிய உளவு தகவல்களின் அடிப்படையில் தான் நம் படை வீரர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தி வெற்றி பெற்றனர்.
மேலும் இவர் ஜம்மு காஷ்மீரில் அதிக காலம் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். நம் நாட்டில் பயங்கரவாத மிரட்டல்கள் இங்கு தான் அதிகம் என்பதால் இங்கு பராக் ஜெயின் பல ஆண்டு காலம் பணியாற்றினார். RAW செயலாளாக பொறுப்பு வகிப்பதற்கு முன்பு அவர் பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர். இவர் 2021 ஜனவரி 1ல் பஞ்சாப் டிஜிபியாக புரோமோஷன் ஆனார். ஆனால் நாட்டின் நலன் கருதி மத்திய அரசு பணிக்கு வந்தார். தற்போது அவருக்கு மத்திய டிஜிபிக்கு சமமான அந்தஸ்து வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழுக்கு குறைவான நிதி... இது ஆதிக்கத்தின் வெளிபாடு... கொதித்தெழுந்த செல்வப்பெருந்தகை!!