மீண்டும் கொரோனா கோரத்தாண்டவம்... ஆக்சிஜன், படுக்கைகள் தயாரா வச்சுக்கோங்க... மத்திய அரசு வார்னிங்!!
ஆக்சிஜன், படுக்கைகள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தியாவில் தற்போது மீண்டும் கொரோனா பரவ தொடங்கியுள்ளது. சென்னையில் ஒருவர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார். இதனால் மக்கள் மத்தியில் மீண்டும் கொரோனா குறித்த அச்சம் பரவி வருகிறது. இந்தியாவில் வைரஸ் பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது. தென் மாநிலங்களில் தான் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஆக்சிஜன், படுக்கைகள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னதாக கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது தொடர்பாக சுகாதார துறை இயக்குநர் ஜெனரல் (DGHS) டாக்டர் சுனிதா சர்மாவின் தலைமையில் ஜூன் 2 மற்றும் 3 தேதிகளில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், பேரிடர் மேலாண்மை பிரிவு, அவசர மேலாண்மை பிரிவு, தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் (NCDC), இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR), ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தின் அதிகாரிகள் (IDSP) மற்றும் டெல்லியில் உள்ள மத்திய அரசு மருத்துவமனைகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மேலும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மருத்துவத்துறை அதிகாரிகள் பங்கேற்று தற்போதைய தொற்று பரவல் நிலைமை மற்றும் தயார்நிலை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தனர்.
இதையும் படிங்க: இதெல்லாம் கருத்து சுதந்திரத்தில் வராது... ராகுல் காந்திக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்!!
சுவாச பிரச்சனை, கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்படும் இணைநோயாளிகள் மற்றும் முதியவர்களுக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதில் பாசிட்டிவ் வரும் நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இன்று மாலை 4 மணி நிலவரப்படி நாடு முழுவதும் 4,302 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 864 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான பாதிப்புகள் லேசானவை என்றும், வீட்டிலேயே சிகிச்சை பெற்று குணமடைந்து வருவதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜனவரி 1 முதல் 44 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதில் பெரும்பாலானோர் ஏற்கனவே உடல்நலக் குறைவு உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், ஆக்சிஜன், தனிமைப்படுத்தும் படுக்கைகள், வென்டிலேட்டர்கள் மற்றும் அத்தியாவசிய மருந்துகள் இருப்பதை மாநிலங்கள் உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் அடிக்கடி கை கழுவ வேண்டும், இருமல், காய்ச்சல் இருக்கும்போது நெரிசலான இடங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும், கடுமையான சுவாச நோய் உள்ளவர்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அறிகுறிகள் மோசமானால் உடனடியாக மருத்துவ உதவி பெற வேண்டும் என்றும் அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: ஆபரேஷன் சிந்தூர் பற்றி பாக்.,க்கு தகவல் தெரிவித்தது எப்போது? ரகசியத்தை உடைத்த முப்படை தலைமை தளபதி!!