×
 

தமிழகத்துக்கான நிதியை ஒதுக்க வேண்டும்... மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு இதுவரை ஒதுவங்கவில்லை எனக் கூறி, கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி இயக்கம் என்ற அமைப்பின் நிர்வாகி வே.ஈஸ்வரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் அவரது மனுவில், உடனடியாக மாணவர் சேர்க்கையை தொடங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.  இந்த வழக்கு நீதிபதிகள் ஜி ஆர் சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அடங்கி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், கல்வி உரிமைச் சட்டத்தில் 25 சதவீத இட ஒதுக்கீட்டு மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தில் 60 சதவீதம் தொகையை மத்திய அரசு 40 சதவீதம் தொகையை மாநில அரசும் வழங்க வேண்டும்.

மத்திய அரசு, கடந்த 2021ம் கல்வியாண்டு முதல் 2023ம் கல்வியாண்டு வரை எந்த நிதியும் ஒதுக்கவில்லை என்றும் 100 சதவீத தொகையை மாநில அரசு தான் வழங்கியதாகவும் குறிப்பிட்டார். மாணவர்களின் கல்வி விஷயத்தில் அக்கறை கொண்டுள்ள மாநில அரசு, மத்திய அரசு நிதி ஒதுக்காவிட்டால் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து முடிவெடுக்க மே 28ஆம் தேதி கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாகவும் கூடுதல் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். மத்திய அரசு நிதி ஒதுக்காததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதையும் படிங்க: தமிழக அரசுக்கு கல்வி நிதி ஒதுக்கப்படாததற்கு காரணமே இதுதான்... நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்!!

தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்காததால் பள்ளிகள் பாதிக்கப்படுவார்கள் என நீதிபதிகள் குறிப்பிட்ட போது, இதே போல மத்திய அரசு ஏன் நிதி ஒதுக்கவில்லை என நீதிமன்றம் கேள்வி எழுப்ப வேண்டும் என கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் நீதிபதிகளிடம் கேட்டுக் கொண்டார். அப்போது மத்திய அரசு ஏன் நிதி ஒதுக்கவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் பாபு, அனைத்து மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டு வருவதாகவும் சில காரணங்களால் தமிழகத்துக்கு நிதி வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

என்ன காரணத்துக்காக நிதி ஒதுக்கப்படவில்லை என நீதிபதிகள் கேட்டபோது, அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், மத்தியில் ஆளும் கட்சிக்கு தமிழகத்தில் ஒரு எம்பி கூட இல்லை என்பதால் ஒதுக்கவில்லை என்றும் தெரிவித்தார். இந்த வழக்கில் இந்த தீர்ப்பளித்த நீதிபதிகள் ஜி ஆர் சுவாமிநாதன் மற்றும் வி லக்ஷ்மி நாராயணன் அமர்வு கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், 25 சதவீத இட ஒதுக்கீட்டு இடங்களுக்கு தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர். அந்த நிதியை தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு உரிய வகையில் வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: எளிய மக்கள் குரலுக்கு கிடைத்த வெற்றி! தங்கக் கடன் நிபந்தனை தளர்வுக்கு சு.வெங்கடேசன் வரவேற்பு...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share