பணி நிரந்தரம் கோரி 12-வது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டம்! முதல்வருக்கு உருக்கமான வேண்டுகோள்!
பணி நிரந்தரம் கோரி சென்னை மாநகராட்சி முன் தூய்மைப் பணியாளர்கள் தங்களது குழந்தைகளுடன் 12-வது நாளாகத் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு மற்றும் பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட வாழ்வாதாரக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை அலுவலக வளாகம் முன்பாக நூற்றுக்கணக்கான தூய்மைப் பணியாளர்கள் தங்களது குழந்தைகளுடன் பதாகைகளை ஏந்தி இன்று 12-வது நாளாகத் தொடர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூய்மைப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்வதோடு ஊதிய உயர்வு, மகப்பேறு விடுப்பு, மாதவிடாய் விடுப்பு, உணவுப் படி வழங்குவது, முறையான கழிப்பறை மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை உரிமைகளைத் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் செய்து தர வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
இப்போராட்டத்திற்கு ஆதரவாகத் தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளும் பள்ளி மாணவர்களும் பதாகைகளைத் தாங்கிப் பெற்றோருடன் களத்தில் அமர்ந்து தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர். அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: 7-வது நாளாக தொடரும் போராட்டம்! முதல்வர் எங்களை ஏன் சந்திக்க மறுக்கிறார்? தூய்மை பணியாளர்கள் கேள்வி!
போராட்டத்தின் போது செய்தியாளர்களைச் சந்தித்த உழைப்போர் உரிமை இயக்கத்தின் மாநில தலைவர் பாரதி பேசுகையில், எங்களது 12 நாள் போராட்டத்தின் முதன்மையான ஒற்றைக் கோரிக்கை பணி நிரந்தரம் மட்டுமே. இன்றைய சட்டமன்ற கூட்டத்தொடரில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ் மோகன் எங்களது கோரிக்கைகள் குறித்துப் பேசியதை வரவேற்கிறோம். ஆனால், அவரே கோரிக்கை வைப்பது போன்று பேசாமல், அரசு எப்போது இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் என்ற குறிப்பிட்ட தேதியைத் திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும். 12 நாட்களாகத் தொடர்ந்து வீதியில் இறங்கிப் போராடியும் முதலமைச்சர் எங்களை அழைத்துச் சந்தித்துப் பேசாதது மிகுந்த வேதனையளிக்கிறது; பல தலைமுறைகளாகத் தொடரும் இந்த வலிக்குத் தீர்வு காணத் தமிழகத்தில் உள்ள அனைத்துத் தூய்மைப் பணியாளர்களையும் உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இப்போராட்டக் களத்திற்கு நேரில் வருகை தந்து ஆதரவளித்த நடிகை சனம் ஷெட்டி செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த ஆட்சியிலும் இதே கோரிக்கைகளுக்காகத் தூய்மைப் பணியாளர்கள் போராடிய போது நான் அவர்களுடன் நின்றேன். தொழிலாளர்களைத் தனியார்மயமாக்கும் நீண்ட காலப் பிரச்சினைக்கு முந்தைய ஆட்சியில் போடப்பட்ட டெண்டர்களை உடனடியாக ரத்து செய்வதில் நடைமுறைச் சிக்கல்கள் இருக்கலாம் என்றாலும், வெயில் மழை பாராமல் உழைக்கும் இவர்களின் பணி நிரந்தரக் கோரிக்கையை முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு உடனடியாக அழைத்து பேசித் தீர்த்து வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய தூய்மைப் பணியாளர் வசந்தி உள்ளிட்ட தொழிலாளர்கள், நாங்கள் நம்பி வாக்களித்துத் தேர்ந்தெடுத்த முதலமைச்சர் விஜய் அண்ணா எங்களை நேரில் அழைத்துச் சந்தித்துப் பேசினால் மட்டுமே எங்களது பல ஆண்டுகால கண்ணீர் துடைக்கப்படும். அவர் மீது எங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது; எங்கள் கோரிக்கையை அவர் நிச்சயம் நிறைவேற்றித் தருவார் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்..
இதையும் படிங்க: பணி நிரந்தரம் கோரிய தூய்மை பணியாளர்கள் கைது! SDPI தலைவர் நெல்லை முபாரக் கண்டனம்!