#BREAKING: சத்தீஸ்கரில் குண்டு வெடிப்பு.. பல வீரர்கள், அதிகாரிகள் காயம்..!
சத்தீஸ்கரில் உள்ள டோன்ட்ரா அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் ASP அதிகாரி பலத்த காயமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் குறிப்பாக சுக்மா, பஸ்தர் போன்ற பகுதிகள் அடிக்கடி நக்சல் தாக்குதல்களுக்கு ஆளாகின்றன. இந்தப் பகுதிகளில் பாதுகாப்புப் படைகள் மீதான தாக்குதல்கள், ஐஇடி வெடிப்புகள் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் நடத்திய ஐஇடி குண்டுவெடிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் கோண்டா-எர்ரபோரா சாலையில் உள்ள டோண்ட்ரா பகுதி அருகே குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அழுத்தமான ஐஇடி குண்டு வெடிப்பு நடந்துள்ளதாகவும் இதில் சுக்மா மாவட்டத்தின் கோண்டா பிரிவு ASP, ஆகாஷ் ராவ் கிரிபுஞ்சே என்ற அதிகாரி பலத்த காயம் அடைந்துள்ளதாகவும் ஐ ஜி பஸ்தார் பி சுந்தர்ராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த குண்டுவெடிப்பில் மேலும் சில அதிகாரிகளும் வீரர்களும் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனிடையே, இந்த சம்பவம் நக்சல் தாக்குதல் இல்லை என்றும், தேடுதல் நடவடிக்கையின்போது புதைத்து வைக்கப்பட்ட ஐஇடி வெடித்ததாகவும் சத்தீஸ்கர் துணை முதலமைச்சர் விஜய் ஷர்மா தெரிவித்துள்ளார்.