×
 

நீதிபதியின் போட்டோ வைத்து சுடுகாட்டில் ‘சூனியம்’! ஜாமினுக்காக ‘மாந்திரீகம்’! சிக்கியது அதிர்ச்சி ஆதாரங்கள்!

சத்தீஸ்கரில், உறவினர் ஒருவருக்கு ஜாமின் பெறுவதற்காக, அம்மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரமேஷ் சின்ஹாவின் புகைப்படத்தை பயன்படுத்தி, சூனியம் வைக்க பூஜை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

நீதிபதியின் போட்டோ வைத்து சுடுகாட்டில் ‘சூனியம்’... ஜாமினுக்காக நடந்த அதிர்ச்சி சம்பவம்!

சத்தீஸ்கரில் கைதான உறவினருக்கு ஜாமின் கிடைக்க வேண்டும் என்பதற்காக, அம்மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் புகைப்படத்தை வைத்து சுடுகாட்டில் மாந்திரீக சடங்கு நடத்தியதாக கூறப்படும் நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டம் தேவரி பகுதியில் உள்ள சுடுகாட்டில், நேற்று முன்தினம் இரவு சிலர் சந்தேகத்திற்கிடமான முறையில் சடங்கு நடத்திக் கொண்டிருந்தனர். இதனை கவனித்த அப்பகுதி மக்கள், அங்கு சென்றபோது நான்கு பேர் மாந்திரீக பூஜையில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது, சத்தீஸ்கர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரமேஷ் சின்ஹா உள்ளிட்டோரின் புகைப்படங்கள் சடங்கு நடைபெற்ற இடத்தில் வைக்கப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், அங்கிருந்தவர்களை பிடிக்க முயன்றனர். இதில் மூன்று பேர் தப்பியோடிய நிலையில், ரிஷிகேஷ் குமார் என்பவர் மட்டும் பொதுமக்களிடம் சிக்கினார். பின்னர் அவர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: 2 நாட்களாக காவல் நிலையத்தில் ஆஜராகாத செந்தில் பாலாஜி?! போலீசாரின் அடுத்த கட்ட சட்ட நடவடிக்கை என்ன?

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அங்கு சோதனை நடத்தினர். தலைமை நீதிபதி ரமேஷ் சின்ஹா மற்றும் மேலும் இருவரின் புகைப்படங்கள், மீன், எலுமிச்சை, குங்குமம் உள்ளிட்ட பொருட்கள் அங்கிருந்து கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து மாவட்ட எஸ்.பி., ரஜ்னேஷ் சிங் கூறுகையில், கத்திக்குத்து வழக்கில் ரிஷிகேஷ் குமாரின் உறவினரான பிரியன்ஷூ போலே உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். அவர்களில் ஒருவருக்கு ஜாமின் கிடைத்துள்ள நிலையில், மற்றவர்களின் ஜாமின் மனுக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

சமூக வலைதளங்களில் ஒரு மந்திரவாதி கூறிய தகவலை பார்த்து, ஜாமின் கிடைப்பதற்காக இந்த சடங்கில் ஈடுபட்டதாக ரிஷிகேஷ் குமார் விசாரணையில் தெரிவித்ததாக போலீசார் கூறுகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட மூன்று புகைப்படங்களில் ஒன்று தலைமை நீதிபதியின் புகைப்படம் என்றும், மற்றவை சிறையில் உள்ள பிரியன்ஷூ போலே மற்றும் கத்திக்குத்து சம்பவத்தில் காயமடைந்ததாக கூறப்படும் நபரின் புகைப்படங்கள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் தொடர்புடைய மேலும் மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர். ஜாமின் பெறுவதற்காக சமூக வலைதளங்களில் கிடைத்த தகவலை நம்பி சுடுகாட்டில் சடங்கு நடத்தப்பட்டதாக கூறப்படும் இந்த சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துக்கு நிம்மதி! நேரில் ஆஜராக விலக்கு... சொத்துக்குவிப்பு வழக்கில் ஹைகோர்ட் நிவாரணம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share