×
 

தமிழக முதல்வர் விஜய்யின் அடுத்த பிளான்..!! பிரதமர் மோடி, சோனியாவை சந்திக்க திட்டம்..!!

பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தமிழக முதலமைச்சர் விஜய் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது. காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் முழு ஆதரவுடன் தவெக 118 எம்.எல்.ஏ.க்களுக்கும் மேல் உறுதியான பலத்தைப் பெற்றது.

இதையடுத்து, கவர்னர் அர்லேகர், விஜய்யை முதலமைச்சராக நியமித்து உத்தரவிட்டார். நேற்று சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமான பதவியேற்பு விழா நடைபெற்றது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் குவிந்த இந்த விழாவில், தமிழ்நாட்டின் 17-வது முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். கவர்னர் அர்லேகர் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்/.

பதவியேற்ற உடனேயே முதலமைச்சர் விஜய் மக்களுக்கு உறுதியளிக்கும் வகையில் மூன்று முக்கிய முடிவுகளுக்கு கையெழுத்திட்டார். வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம், பெண்கள் பாதுகாப்புக்காக ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப் படை அமைப்பு, மற்றும் போதைப்பொருட்கள் ஒழிப்புக்கான தனி படை ஆகியவை இந்த மூன்று முக்கிய அறிவிப்புகளாகும். இந்த நடவடிக்கைகள் தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

இதையும் படிங்க: 75வது ஆண்டு நிறைவு விழா: சோமநாதர் கோயில் அமுதப் பெருவிழா கோலாகலம்.. பிரதமர் மோடி சாமி தரிசனம்..!!

பதவியேற்புக்குப் பின்னர் முதலமைச்சர் தலைமைச் செயலகத்துக்கு சென்று பல்வேறு அரசுத் துறை கோப்புகளில் கையெழுத்திட்டார். உயர் அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தி, அரசு இயந்திரத்தை உடனடியாக செயல்படுத்த உத்தரவிட்டார். மாலையில் வேப்பேரியில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார். அப்போது திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, பெரியார் சிலையை பரிசாக வழங்கி முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்தார். சமூக நீதி, சமத்துவம் ஆகிய கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வேன் என விஜய் உறுதியளித்தார்.

இன்று தமிழக சட்டசபையின் 17-வது சட்டமன்றத்தின் முதல் கூட்டம் கூடியது. தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டார். சபாநாயகர், “தமிழக மக்களுக்காக தன்னை இயந்திரமாக மாற்றிக்கொண்ட முதல்வருக்கு வணக்கம்” என புகழாரம் சூட்டினார். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. 

முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ், செங்கோட்டையன், வெங்கட்ரமணன், நிர்மல் குமார், ராஜ்மோகன், பிரபு உள்ளிட்டோர் எம்.எல்.ஏ.க்களாக பதிவேட்டில் கையெழுத்திட்டனர். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் அரசு செயல்படும் என முதலமைச்சர் விஜய் உறுதியளித்துள்ளார். 

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தேசியத் தலைவர்களை விரைவில் சந்தித்து தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விவாதிக்க திட்டமிட்டுள்ளார் தமிழக முதலமைச்சர் விஜய். தமிழக அரசியலில் இளம் தலைமையின் வருகை மக்களிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
 

இதையும் படிங்க: 98 வயது.. பாஜக மூத்த தொண்டர் காலில் விழுந்தார் பிரதமர் மோடி..!! பதவியேற்பு விழாவில் சுவாரசியம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share