இம்ரான்கானுக்கு சிகிச்சை!! கபில் தேவ், கவாஸ்கர் கோரிக்கை!! முன்னாள் கேப்டன்கள் பாக்., அரசுக்கு கடிதம்!!
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கானைச் சிறையில் மனிதாபிமானத்துடன் நடத்துமாறு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
பாகிஸ்தான் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், லெஜண்ட் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் (வயது 73) தற்போது ராவல்பிண்டி அடியலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 1992ஆம் ஆண்டு உலக கோப்பை (50 ஓவர்) வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த இவர், பின்னர் அரசியலில் இறங்கி 2018-2022 வரை பிரதமராக பதவி வகித்தார்.
ஊழல் வழக்கில் சிக்கி 2023ஆம் ஆண்டு 14 ஆண்டு சிறைத் தண்டனை பெற்றார். கடந்த இரண்டரை ஆண்டுகளாக சிறையில் இருக்கும் அவருக்கு போதிய மருத்துவ வசதி இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சமீபத்தில், இம்ரான் கானின் வலது கண்ணில் 85 சதவீதம் பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞரும் குடும்பத்தினரும் தெரிவித்தனர். சிறையில் மருத்துவ சிகிச்சை தாமதமானதால் இந்த நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பெரும் சர்ச்சை எழுந்த நிலையில், உலக கிரிக்கெட் வட்டாரத்தில் இருந்து மனிதாபிமான அடிப்படையில் கோரிக்கை வலுத்துள்ளது.
இதையும் படிங்க: சிறையில் இம்ரான் கான் அனுபவிக்கும் கொடுமை!! பார்வை இழப்பு!! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
இந்தியாவின் சுனில் கவாஸ்கர், கபில் தேவ், ஆஸ்திரேலியாவின் ஆலன் பார்டர், கிரெக் சாப்பல், இயான் சாப்பல், இங்கிலாந்தின் நாசர் ஹுசைன், மைக்கேல் ஆதர்டன், மைக்கேல் பிரியர்லி, டேவிட் கவர், வெஸ்ட் இண்டீசின் கிளைவ் லாய்டு, நியூசிலாந்தின் ஜான் ரைட், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் வாக், கிம் ஹ்யூஸ், பெலிண்டா கிளார்க் ஆகிய 14 முன்னாள் கேப்டன்கள் சேர்ந்து பாகிஸ்தான் அரசுக்கு திறந்த கடிதம் எழுதியுள்ளனர். கிரெக் சாப்பல் தயாரித்த இந்த கடிதம் பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீஃபுக்கு அனுப்பப்பட்டது.
கடிதத்தில், “இம்ரான் கான் கடந்த இரண்டரை ஆண்டுகளாக சிறையில் உள்ளார். அவரது பார்வை பாதிப்பு குறித்த செய்திகள் எங்களை ஆழமாக கவலையடையச் செய்துள்ளன. கிரிக்கெட் வீரர்களாக, நியாயம், மரியாதை, கௌரவம் ஆகியவற்றை மதிப்பவர்களாக, இம்ரான் கானுக்கு தகுந்த மரியாதையுடனும் மனிதாபிமானத்துடனும் நடத்தப்பட வேண்டும் என கோருகிறோம்.
அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சையை உடனடியாகவும் தொடர்ச்சியாகவும் வழங்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களை சந்திக்க அனுமதி, சட்ட ரீதியான நியாயமான விசாரணை ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அழைப்பு இந்தியா-பாகிஸ்தான் இடையேயான அரசியல் பதற்றத்தையும் தாண்டி கிரிக்கெட் உலகின் ஒற்றுமையை காட்டுகிறது. பாகிஸ்தான் அரசு இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கிறது என உலகம் உற்று நோக்கி வருகிறது. இம்ரான் கானின் உடல்நலம் குறித்த கவலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதையும் படிங்க: வேலூரில் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி!! கறார் காட்டும் போலீசார்! 20 நிபந்தனைகள் விதிப்பு! தவெக-வினர் அப்செட்!