ஈரான் தூதருக்கு இந்தியா சம்மன்! இந்திய கப்பல்கள் மீதான தாக்குதலுக்கு டெல்லி கடும் கண்டனம்!
இந்தியக் கப்பல்கள் மீதான தாக்குதலுக்கு வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம்; ஈரான் தூதரை நேரில் அழைத்து விளக்கம் கோரியது இந்தியா.
ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) பயணம் மேற்கொண்ட இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்திய விவகாரம், இரு நாடுகளுக்கு இடையே பெரும் ராஜீய முறுகலை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தைக் கண்டித்து, டெல்லியில் உள்ள ஈரான் தூதருக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் இன்று அவசர 'சம்மன்' அனுப்பி நேரில் வரவழைத்தது.
இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், ஈரான் தூதரை நேரில் அழைத்து இந்தியாவின் முறையான கண்டனத்தைப் பதிவு செய்தனர். சர்வதேசக் கடல் எல்லை மற்றும் அமைதி உடன்பாடுகளுக்கு மாறாக, இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியது ஏன் என்பது குறித்து விரிவான விளக்கம் கேட்கப்பட்டது. இனி வரும் காலங்களில் இந்தியக் கப்பல்கள் மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பிற்கு ஈரான் முழு உத்திரவாதம் அளிக்க வேண்டும் என இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
நேற்று ஹார்முஸ் நீரிணையை கடக்க முயன்றபோது தாக்குதலுக்கு உள்ளான இரண்டு முக்கிய கப்பல்கள் குறித்து அமைச்சகம் விவாதித்தது. ஈராக்கில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றி வந்த பிரம்மாண்ட டேங்கர் கப்பல். சவுதி அரேபியாவில் இருந்து சரக்குகளை ஏற்றி வந்த மற்றுமொரு இந்தியக் கப்பல்.இந்த இரண்டு கப்பல்களும் தாக்குதல் காரணமாக நீரிணையை கடக்க முடியாமல் பின்வாங்கியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஹார்முஸ் நீரிணை மீது மீண்டும் கட்டுப்பாடுகள்.. பகீர் கிளப்பிய ஈரான்..!! காரணம் என்ன..??
மத்திய கிழக்கில் தற்காலிகப் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டும், ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்தும் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. ஈரானியத் துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை நீடிப்பதால், ஈரான் ஆத்திரமடைந்து இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் கருதப்படுகிறது. வணிகக் கப்பல்கள் மீதான எத்தகைய தாக்குதலும் சர்வதேச வர்த்தகத்தைப் பாதிக்கும்" என இந்தியா எச்சரித்துள்ளது.
தாக்குதலுக்குள்ளான கப்பல்களில் இருந்த இந்திய மாலுமிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகப் பிரிட்டனின் UKMTO அமைப்பு உறுதி செய்துள்ளது. இருப்பினும், அந்தப் பகுதியில் சிக்கியுள்ள இதர 15-க்கும் மேற்பட்ட இந்தியக் கப்பல்களின் பாதுகாப்பு குறித்து இந்தியா தொடர்ந்து ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சர்வதேச அளவில் எழுந்துள்ள இந்த விவகாரம் இந்திய வெளியுறவுத்துறையின் அதிரடித் தார்மீகத் தலையீடாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அமைதி பேச்சுவார்த்தையில் தோல்வி என்றால்... ஈரானுக்கு எதிராக தீவிர ராணுவ நடவடிக்கை தான்..!! டிரம்ப் வார்னிங்..!!