கரூர் விவகாரம் குறித்து வாய் திறக்கக் கூடாது!! முதல்வர் விஜய் பேசுவதை தடுக்க திமுக மும்முரம்!
தமிழக வெற்றிக் கழக தலைவரும், தமிழக முதல்வருமான விஜய், அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரிடம் சி.பி.ஐ., பல முறை விசாரணை நடத்தி உள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில், தமிழக முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பொதுவெளியில் பேசுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தி.மு.க. சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2025 செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கரூரில் நடத்திய பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியின் கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. முதல்வர் விஜய், அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரிடம் சி.பி.ஐ. பல முறை விசாரணை நடத்தியுள்ளது.
இந்நிலையில், தி.மு.க. அமைப்புச் செயலர் ஆர்.எஸ். பாரதி தாக்கல் செய்த மனுவில், “வழக்கு விசாரணை நடைபெற்று வரும் போது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடர்ந்து அவதூறான கருத்துகளை பொதுவெளியில் பேசி வருகிறார். இது சாட்சியங்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ராகுல்காந்தி கோரிக்கையை நிராகரித்த மு.க.ஸ்டாலின்! தேர்தல் முறைகேடு கடிதத்தில் கையெழுத்திட மறுப்பு!
மேலும், முதல்வர் விஜய் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதோடு, அரசு சார்பில் நிதியுதவி மற்றும் பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளதாக வெளியான தகவல்கள், சி.பி.ஐ. விசாரணையின் நடுநிலையை பாதிக்கும் என்று மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
“விசாரணையின் நம்பகத்தன்மை பாதிக்கப்படாமல் இருக்க, சி.பி.ஐ.யிடம் திட்டத்தை சமர்ப்பித்த பின்னரே பணி நியமனங்கள் வழங்க அனுமதிக்க வேண்டும்” எனவும், “வழக்கு தொடர்பாக முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பொதுவெளியில் பேச தடை விதிக்க வேண்டும்” எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் தேவையற்ற விவாதங்களை கட்டுப்படுத்தவும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் நெரிசல் சம்பவம் தமிழக அரசியலில் தொடர்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், உச்ச நீதிமன்றத்தின் முடிவு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: எனக்கு தெரியாம எதுக்கு இப்படி பண்ணீங்க!! உதயநிதி ஸ்டாலின், சபரீசனை கடிந்துகொண்ட மு.க.ஸ்டாலின்!