×
 

அடேய்..!! அது BED இல்ல.. கரண்ட் கம்பி..!! தலைக்கேறிய போதையில் வாலிபர் அட்ராசிட்டி..!!

மின்கம்பத்தின் மேல் ஏறிய அந்த வாலிபர், ஒரு கம்பியில் தலையை வைத்தும் இன்னொரு கம்பியில் கால்களை நீட்டியும் ஹாயாக படுத்துக் கொண்டார்.

உத்தரப் பிரதேச மாநிலம் மகராஜ்கஞ் பகுதியில் மதுபோதை தலைக்கு ஏறிய ஒரு வாலிபர், 11 கிலோ வோல்ட் உயர் அழுத்த மின்கம்பத்தில் ஏறி படுத்து யோகாசனம் செய்வது போன்ற சேட்டைகளில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்து போன நிலையில், உடனடியாக மின்வாரியத்துக்கு தகவல் தெரிவித்து அவரது உயிரை காப்பாற்றினர்.

சம்பவம் நடந்த இடம் மகராஜ்கஞ் பகுதியில் உள்ள ஒரு பொது இடம். அங்கு நன்றாக குடித்துவிட்டு தள்ளாடியபடி நடந்து வந்த இளைஞர், திடீரென அருகில் இருந்த மின்கம்பத்தில் ஏறத் தொடங்கினார். அவரைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். ஏனெனில் அந்த மின்கம்பத்தில் 11 கே.வி. உயர் அழுத்த மின்சாரம் செல்லும் கம்பிகள் இருந்தன. சிறிதளவு தவறு ஏற்பட்டாலும் உயிருக்கு உலை வைக்கும் அபாயம் இருந்தது.

உடனடியாக பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தனர். மின்வாரிய ஊழியர்கள் சமயோசிதமாக செயல்பட்டு, மின்சார இணைப்பை உடனடியாக துண்டித்தனர். இதனால் பெரும் அபாயம் தவிர்க்கப்பட்டது. ஆனால் போதை முழுவதுமாக ஏறிய நிலையில் இருந்த அந்த வாலிபருக்கு எதுவும் புரியவில்லை. மின்கம்பத்தின் மேல் இருந்த இரு கம்பிகளுக்கு இடையில் தலையையும், கால்களையும் நீட்டி ஒரு படுக்கையில் படுப்பது போல் ஹாயாக படுத்துக் கொண்டார். 

இதையும் படிங்க: உ.பி.யில் சோக சம்பவம்: திடீரென இடிந்து விழுந்த பாலம்.. 6 பேர் பரிதாப பலி..!!

அங்கிருந்து அவர் செய்த சேட்டைகள் பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தின. அவ்வப்போது புரண்டு படுத்தார். சில நேரங்களில் கால்களை நீட்டி யோகா செய்வது போல் நிலைகளை மாற்றினார். மற்றொரு சமயம் கவிழ்ந்து படுத்து, கைகளை ஊன்றி தண்டால் போன்ற செயல்களையும் செய்தார். கை கால் தவறி கீழே விழுந்தால் உடனே உயிரிழப்பு ஏற்படும் நிலை இருந்தபோதும், அவர் எதையும் உணராமல் சுகமாக இருப்பதாக நினைத்து செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தக் காட்சியைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் இணைந்து சுமார் 30 நிமிட முயற்சியுக்குப் பின் அந்த வாலிபரை பத்திரமாக கீழே இறக்கினர். இந்த சம்பவத்தின் போது செல்போனில் பதிவு செய்யப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

போதையின் உச்சத்தில் மனிதன் எந்த அளவுக்கு தன்னுணர்வை இழக்கிறான் என்பதை இந்த சம்பவம் பறைசாற்றுகிறது. அதே சமயம், பொதுமக்களின் விழிப்புணர்வு மற்றும் அதிகாரிகளின் உடனடி நடவடிக்கை காரணமாக ஒரு உயிர் பலியாகாமல் தப்பியது பாராட்டத்தக்கது. இத்தகைய சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதால், குடிபழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்தை அதிகப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்பது பொதுமக்களின் கருத்தாகும். 
 

இதையும் படிங்க: பாக். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பா..?? கர்நாடகாவில் வாலிபரை சுத்துப்போட்ட போலீஸ்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share