×
 

மீண்டும் மீண்டுமா..!! பணமோசடி வழக்கு: ரிலையன்ஸ் நிறுவனத்தில் ED அதிரடி ரெய்டு..!!

பணமோசடி வழக்கு தொடர்பாக ரிலையன்ஸ் பவர் நிறுவனம் மற்றும் தொடர்புடைய இடங்களில் இன்று அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தி வருகிறது.

முன்னணி தொழிலதிபரும், அனில் திருபாய் அம்பானி குழுமத்தின் தலைவருமான அனில் அம்பானி மீது மீண்டும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. ரிலையன்ஸ் பவர் உள்ளிட்ட அவரது குழும நிறுவனங்கள் தொடர்பான பண மோசடி மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்குகளில் அமலாக்கத்துறை (ED) இன்று (மார்ச் 6, 2026) அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக, அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழும நிறுவனங்கள் வங்கிகளிடமிருந்து பெற்ற கடன்களை சட்டவிரோதமாக மற்ற நிறுவனங்களுக்கு திருப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, அனில் அம்பானி ரூ.40,000 கோடி அளவுக்கு பண மோசடி செய்ததாக கூறியுள்ளது. இதனடிப்படையில், சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் அமலாக்கத்துறையும் தனியாக வழக்கு பதிவு செய்தது.

இதுவரை அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில், அனில் அம்பானி தொடர்புடைய ரிலையன்ஸ் குழும நிறுவனங்களுக்கு சொந்தமான ரூ.15,700 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. இதில் அவரது மும்பை பாலி ஹில் பகுதியில் உள்ள 'அபோட்' என்ற ஆடம்பர வீடு (ரூ.3,716 கோடி மதிப்பு) உள்ளிட்ட பல சொத்துக்கள் அடங்கும். மேலும், அமலாக்கத்துறை அவருக்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தியுள்ளது. அண்மையில் இரண்டு முறை அவரை நேரடியாக விசாரித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ப. சிதம்பரம் வழக்குகளில் ED-யின் அடுத்த நகர்வு: விரைவான விசாரணைக்கு அனுமதி..!!

இந்நிலையில், இன்று காலை மும்பை மற்றும் ஐதராபாத் நகரங்களில் ரிலையன்ஸ் பவர் நிறுவனம் மற்றும் அதனுடன் தொடர்புடைய 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சுமார் 15 அணிகள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சோதனைகள் வங்கி கடன் மோசடி தொடர்பான பண மோசடி மற்றும் வெளிநாட்டு பரிவர்த்தனை மேலாண்மை சட்டம் (FEMA) கீழ் உள்ள சந்தேகத்திற்குரிய நிதி பரிவர்த்தனைகளை மையமாகக் கொண்டவை என தெரிய வருகிறது.

ரிலையன்ஸ் குழுமத்தின் பல நிறுவனங்கள் – குறிப்பாக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (RCOM), ரிலையன்ஸ் பவர், ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் உள்ளிட்டவை – இந்த விசாரணையில் சிக்கியுள்ளன. கடன்களை திருப்பி அடைக்காமல், தொடர்புடைய நிறுவனங்களுக்கு நிதியை தவறாக பயன்படுத்தியதாகவும், பொது நிதியை மோசடியாக திருப்பியதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. 

உச்ச நீதிமன்றமும் இந்த வழக்குகளில் தாமதம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.இந்த சோதனைகள் அனில் அம்பானி குழுமத்தின் மீதான நிதி ஒழுங்குமுறை அமைப்புகளின் கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன. விசாரணை முழுமையடையும் வரை மேலும் நடவடிக்கைகள் எதிர்பார்க்கப்படுகின்றன. 

இதையும் படிங்க: சூடுபிடிக்கும் சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு..!! நேரில் ஆஜரான ஜெயராம்..!! களத்தில் இறங்கிய ED..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share