ட்ரம்ப் - மோடி ஆலோசனையில் எலான் மஸ்க் பங்கேற்பு?! திட்டவட்டமாக மறுக்கும் வெளியுறவுத்துறை!!
மோடி - டிரம்ப் ஆலோசனையில் எலான் மஸ்க் பங்கேற்கவில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது
பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் கடந்த 24-ம் தேதி நடத்திய தொலைபேசி உரையாடலில், டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் பங்கேற்கவில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை தெளிவுபடுத்தியுள்ளது.
சில அமெரிக்க ஊடகங்கள், “மோடி-டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்கும் இணைந்திருந்தார்” என்று செய்தி வெளியிட்டிருந்தன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்திய வெளியுறவுத்துறை உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ளது.
வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “கடந்த 24-ம் தேதி பிரதமர் மோடியும் அதிபர் டிரம்ப்பும் இருவருக்கும் இடையே மட்டுமே தொலைபேசி உரையாடல் நடைபெற்றது. அப்போது வேறு எந்தத் தனிநபரும் பங்கேற்கவில்லை” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கும், அதிபர் ட்ரம்புக்கும் மிகச்சிறந்த உறவு உள்ளது!! ஐஸ் வைக்கும் வெள்ளை மாளிகை!!
இந்த உரையாடல் இரு நாட்டு தலைவர்களுக்கு இடையேயான முதல் தொலைபேசி உரையாடல் என்பதால், அதில் மஸ்க் போன்ற ஒரு தனியார் தொழிலதிபர் பங்கேற்றதாக வெளியான தகவல் அரசியல் மற்றும் இராஜதந்திர வட்டாரங்களில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
குறிப்பாக, டிரம்ப் அரசாங்கத்தில் எலான் மஸ்க்குக்கு அளிக்கப்பட்டிருந்த கவுரவப் பொறுப்புகளில் இருந்து அவர் சமீபத்தில் விலகியிருந்த பின்னணியில் இந்தச் செய்தி மேலும் முக்கியத்துவம் பெற்றது.
இருப்பினும், இந்திய அரசு இந்தக் கூற்றை உறுதியாக மறுத்துள்ளது. இரு நாட்டு தலைவர்களும் இருதரப்பு உறவுகள், வர்த்தகம், தொழில்நுட்ப ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களைப் பற்றி நேரடியாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.
இந்தச் செய்தி சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. சில ஊடகங்கள் “அசாதாரணமான நிகழ்வு” என்று விவரித்த நிலையில், இந்திய வெளியுறவுத்துறையின் தெளிவான மறுப்பு இப்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடியும் அதிபர் டிரம்ப்பும் இனி வரும் காலங்களில் இரு நாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் பல முக்கிய முடிவுகளை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைக்கு, மோடி-டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் பங்கேற்கவில்லை என்பது இந்திய அரசின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடாக உள்ளது.
இதையும் படிங்க: மோடியும், நானும் காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பவர்கள்!! பலருக்கு இந்த தகுதி இல்லை!! ட்ரம்ப் சூசகம்!