×
 

தமிழ்நாட்டில் 68 சுங்கச்சாவடிகளில் உயருகிறது கட்டணம்..!! இன்று நள்ளிரவு முதல் அமல்..!!

தமிழ்நாட்டில் 68 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

தமிழ்நாட்டில் இயங்கும் 68 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. இந்த உயர்வு தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் வெளிவட்டச் சாலைகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளை உள்ளடக்கியது. குறிப்பாக, ஸ்ரீபெரும்புதூர், பரனூர், வானகரம், கிருஷ்ணகிரி, மதுரை, நான்குநேரி, வாணியம்பாடி, விராலிமலை, கப்பலூர், கனியூர், ஆத்தூர், தேனி உள்ளிட்ட முக்கிய இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் இந்த மாற்றம் நடைமுறைக்கு வருகிறது.

சென்னை-கன்னியாகுமரி, திருச்சி-சேலம், சேலம்-கோயம்புத்தூர் போன்ற முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 60 சுங்கச்சாவடிகள், வண்டலூர்-மிஞ்சூர் வெளிவட்டச் சாலையில் 4 சுங்கச்சாவடிகள், மதுரை வெளிவட்டச் சாலையில் 2 சுங்கச்சாவடிகள் மற்றும் நாவலூர் உள்ளிட்ட மாநில நெடுஞ்சாலையில் உள்ள 8 சுங்கச்சாவடிகள் ஆகியவற்றில் ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணம் அமலுக்கு வரும்.

தமிழ்நாட்டில் மீதமுள்ள 17 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் ஆண்டு அட்டவணைப்படி கட்டண உயர்வு செயல்படுத்தப்படும். இந்த உயர்வு சுமார் 3 முதல் 5 சதவீதம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கார்கள் மற்றும் லேசான வாகனங்களுக்கு ரூ.5 வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். கனரக வாகனங்களுக்கு ரூ.40 வரை உயர்வு ஏற்படலாம். ஒட்டுமொத்தமாக, சுங்கக் கட்டணம் ரூ.5 முதல் ரூ.100 வரை உயரும் வாய்ப்பு உள்ளது.

இதையும் படிங்க: சுங்கச்சாவடிகளில் இனி NO CASH.. டிஜிட்டல் பேமெண்ட் மட்டும்தான்..!! நாளை முதல் அமல்..!!

தனியார் பேருந்துகள், சுற்றுலாப் பேருந்துகள் மற்றும் நீண்ட தூர சரக்கு வாகனங்கள் பல சுங்கச்சாவடிகளைக் கடக்க வேண்டியிருப்பதால், இந்த உயர்வு அவர்களின் இயக்கச் செலவை கணிசமாக அதிகரிக்கும். இது போக்குவரத்துத் துறையினருக்கு பெரும் சுமையாக அமையும் என்று அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், பல வாகன ஓட்டிகள் மற்றும் போக்குவரத்து நிறுவனங்கள் மாற்றுப் பாதைகளை நாடக்கூடும். இதனால் கிராமப்புற சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. மேலும், அதிக போக்குவரத்து காரணமாக சாலைகள் விரைவில் சேதமடையவும், பாதுகாப்புப் பிரச்சினைகள் ஏற்படவும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தக் கட்டண உயர்வு அத்தியாவசியப் பொருட்களின் கொண்டு செல்லும் செலவை அதிகரிக்கும் என்பதால், அவற்றின் விலை உயரும் அபாயமும் எழுந்துள்ளது.

இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்படலாம்.இந்தச் சூழலில், சுங்கச்சாவடி கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளது. மக்கள் மற்றும் போக்குவரத்துத் துறையினருக்கு நிவாரணம் வழங்கும் வகையில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: எரிபொருள் விலை உயர்வு எதிரொலி! சொமேட்டோ உணவு டெலிவரி கட்டணம் உயர்வு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share