திமுக தேர்தல் தோல்வி குறித்த கள ஆய்வு..!! மு.க.ஸ்டாலின் கைக்கு போன பரபரப்பு ரிப்போர்ட்..!!
திமுகவில் 2 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர்களை நியமிக்க வேண்டும் என்றும் நிர்வாகிகள் தெரிவித்து உள்ளதை அறிக்கையில் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களைப் பெறத் தவறியதால் ஆட்சியை இழந்த தி.மு.க., தோல்விக்கான காரணங்களை ஆழமாக ஆராயும் வகையில் விரிவான கள ஆய்வை மேற்கொண்டுள்ளது. கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தேர்தல் முடிவுகளை முழுமையாகப் புரிந்துகொள்ளும் நோக்கில் கடந்த மாதம் 14-ம் தேதி 36 பேர் கொண்ட 19 தனி குழுக்களை அமைத்தார். இந்தக் குழுக்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், தலைமை நிலையச் செயலாளர்கள், இளைஞர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இடம் பெற்றிருந்தனர்.
ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் தனித்தனியாகப் பொறுப்பேற்ற இந்தக் குழுக்கள், உள்ளூர் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களைச் சந்தித்து விரிவான கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தினர். இதன் மூலம் தேர்தல் தோல்விக்குப் பின்னணியில் இருந்த பல்வேறு பிரச்சினைகளை ஆவணப்படுத்தினர். பல தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு போதிய அளவில் இல்லை என்பது முக்கியக் குற்றச்சாட்டாக எழுந்தது. மேலும், சில இடங்களில் திமுகவின் உட்கட்சி பூசல்களைத் தீர்க்கத் தவறியதும், அதன் எதிரொலியாக வாக்குப் பங்கீடு பாதிக்கப்பட்டதும் சுட்டிக்காட்டப்பட்டன.
வெற்றிக்கான வாய்ப்பு அதிகமிருந்த சில தொகுதிகளில் செல்வாக்கு மிக்க மூத்த எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டு, புதுமுகங்களுக்கு சீட் வழங்கியது பெரும் தவறு என்று பலரும் வலியுறுத்தினர். வேட்பாளர் தேர்வில் காரணமின்றி மாற்றங்கள் செய்யப்பட்டது, கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கிய விதம், தேர்தல் பணியின்போது சிலர் ஒதுங்கியிருந்தது போன்ற பல காரணங்கள் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக, தொண்டர்கள் மத்தியில் “இனி வரும் தேர்தல்களில் தி.மு.க. தனித்துப் போட்டியிட வேண்டும்” என்ற கோரிக்கை வலுவாக முன்வைக்கப்பட்டதாகத் தெரிய வருகிறது.
இதையும் படிங்க: "அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் உறவினர் ஜான் பிரிட்டோ கிடையாது": திமுக புகாருக்கு அமலாக்கத்துறை விளக்கம்!
மேலும், கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கும்போது, அந்தத் தொகுதியில் அவர்களுக்கான செல்வாக்கு, வெற்றி வாய்ப்பு ஆகியவற்றை கீழ்மட்ட அளவில் முழுமையாக விசாரித்த பின்னரே முடிவு எடுக்க வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது. கட்சியின் அமைப்பு ரீதியான பலவீனங்களைச் சரி செய்யும் வகையில், ஒரு மாவட்டத்துக்கு இரண்டு மாவட்டச் செயலாளர்கள் நியமிக்க வேண்டும் என்ற பரிந்துரையும் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.
இன்று ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் இந்த 19 குழுக்களின் அறிக்கைகளை மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டார். அறிக்கை சமர்ப்பிப்புக்குப் பின்னர், துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, மூத்த தலைவர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்டோருடன் விரிவான ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் தேர்தல் தோல்வியைச் சரி செய்யும் வழிமுறைகள், எதிர்காலத் தேர்தல் உத்திகள், கட்சியைப் பலப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தி.மு.க.வின் இந்த உள் மதிப்பீடு, கட்சியின் எதிர்கால அரசியல் பயணத்துக்கு முக்கியமான திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தோல்வியிலிருந்து பாடம் கற்று, அடுத்த தேர்தல்களில் வலுவான மீட்டெடுப்பை நோக்கி கட்சி நகரும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
இதையும் படிங்க: காமராஜர் காலத்திற்குப் பிறகு நேர்மை அரசியலாகியுள்ளது: முதல்வர் விஜய்யின் முயற்சிகளுக்கு மாணிக்கம் தாகூர் பாராட்டு!