×
 

நடைபாதைகள் பாதசாரிகளுக்கு மட்டுமே ஆக்கிரமிப்பை ஏற்க முடியாது! டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி!

நடைபாதைகள் பாதசாரிகளுக்கு மட்டுமே என்றும் அங்குள்ள ஆக்கிரமிப்புகளை இடிக்கத் தடை விதிக்க முடியாது என்றும் டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

சாலையோர நடைபாதைகள் என்பவை பொதுமக்கள் நடந்து செல்வதற்காக மட்டுமே அமைக்கப்பட்டவை என்றும், அங்கு ஆக்கிரமிப்பு செய்து குடிசைகளையோ கடைகளையோ அமைப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்த டெல்லி உயர்நீதிமன்றம், மாநகராட்சியின் இடிப்பு நடவடிக்கைக்குத் தடை விதிக்க மறுத்து மனுக்களை முடித்து வைத்துள்ளது.

டெல்லியின் லோஹர் பஸ்தி, லால் பாக், ஆசாத் நகர், விகாஸ் சமிதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொது இடங்களையும் சாலையோர நடைபாதைகளையும் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான ஆக்கிரமிப்புக் குடிசைகள் மற்றும் வணிகக் கடைகளை இடித்து அகற்றும் கூட்டு நடவடிக்கையைப் பொதுப்பணித்துறையும் டெல்லி மாநகராட்சியும் இணைந்து முன்னெடுத்தன. 

இந்த நடவடிக்கைக்கு உடனடியாக இடைக்காலத் தடை விதிக்கக் கோரியும், ஆக்கிரமிப்புகளை இடிக்க வழங்கப்பட்ட நோட்டீஸ்களைச் சட்டவிரோதமானது என அறிவித்து ரத்து செய்யக் கோரியும் அப்பகுதி மக்கள் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவசர மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதையும் படிங்க: தமிழக பாஜக தலைமை மாற்றமா? வானதி சீனிவாசனுக்கு பதவி? டெல்லியில் தீவிர ஆலோசனை!!

இம்மனுக்கள் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்மீத் சிங் அமர்வு முன்பு இன்று தீவிர விசாரணைக்கு வந்தன. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, நடைபாதைகளில் குடிசைகளையோ, கடைகளையோ தன்னிச்சையாகக் கட்டுவது அப்பட்டமான சட்டவிரோதச் செயலாகும்; இத்தகைய ஆக்கிரமிப்புகளை நீதிமன்றம் ஒருபோதும் அனுமதிக்காது. 

சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பொதுமக்கள் பாதுகாப்பாக நடந்து செல்லவும் மட்டுமே நடைபாதைகள் உருவாக்கப்பட்டுள்ளன. எனவே, எந்தக் காரணத்தைக் கொண்டும் நடைபாதைகளை ஆக்கிரமிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் காட்டமாகக் கூறி, மனுவை விசாரிக்கத் தயக்கம் காட்டினார்.

அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகவேந்திர உபாத்யாய், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய மாற்று இடம் மற்றும் மறுவாழ்வுத் திட்டங்களை அரசு முழுமையாகச் செயல்படுத்தும் வரை ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றும் நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார். 

இருப்பினும் இடிப்பு நடவடிக்கைகளுக்கு எந்தவிதத் தடையும் விதிக்க திட்டவட்டமாக மறுத்துவிட்ட நீதிபதி, மனுதாரர்களின் மறுவாழ்வுத் திட்டம் தொடர்பான கோரிக்கைகளை டெல்லி அரசு நான்கு வார காலத்திற்குள் உரிய முறையில் பரிசீலிக்க வேண்டும் என அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: கொரோனாவை மிஞ்சுகிறதா பன்றிக் காய்ச்சல்? நீலமாகும் உதடுகள் சொல்லும் ஆபத்து என்ன?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share