வெப்ப அலை எச்சரிக்கை..!! வட-மத்திய இந்தியாவில் 25ம் தேதி வரை தாக்கம்..!! IMD அப்டேட்..!!
இந்தியாவை ஒட்டிய இடங்களில் வரும் 20ம் தேதி முதல் 25ம் தேதி வரை வெப்ப அலை வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆராய்ச்சித் துறை (IMD) வெளியிட்ட அவசர எச்சரிக்கையில், வடமேற்கு, மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவின் பல பகுதிகளில் அடுத்த நான்கைந்து நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்று தெரிவித்துள்ளது. ஏற்கெனவே ஏப்ரல் 18-ம் தேதி ஹரியானாவில் தொடங்கிய இந்த வெப்ப அலை, டெல்லி, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் பரவியுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஹரியானா, சண்டிகார், டெல்லி, பஞ்சாப், கிழக்கு ராஜஸ்தான், விதர்பா, சத்தீஷ்கார், மேற்கு உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்காளம், ஜார்கண்ட், ஒடிசா மற்றும் கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகளில் ஏப்ரல் 20 முதல் 25 வரை வெப்ப அலை நிலவும்.
இந்தப் பகுதிகளில் சில இடங்களில் வெப்பநிலை 43 டிகிரி செல்சியஸைத் தொடலாம் என்று IMD கூறியுள்ளது. மேற்கு வங்காளத்தின் கங்கைக்கரை ஓரப் பகுதிகளில் 26-ம் தேதி வரை வெப்பமும் ஈரப்பதமான வானிலையும் தொடரும். தென்னிந்தியாவிலும் வெப்பம் அதிகரிக்கும். தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 22-ம் தேதி வரை அதிக வெப்பநிலையுடன் ஈரப்பதமான சூழல் நிலவும்.
இதையும் படிங்க: ப்ப்பா...!! வெளில தலை காட்ட முடியல..!! தமிழ்நாட்டில் 12 இடங்களில் சதம் அடித்த வெயில்..!!
கேரளா, மாஹே, கடலோர ஆந்திரப் பிரதேசம், ஏனாம் ஆகிய பகுதிகளில் 24-ம் தேதி வரையும், குஜராத் கடலோரப் பகுதிகளில் 24 மற்றும் 25-ம் தேதிகளிலும் இதே போன்ற வெப்ப-ஈரப்பத சூழல் இருக்கும். இது உடலை அதிகம் சோர்வடையச் செய்யும்.மேலும், ஹரியானா, சண்டிகார், மேற்கு உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், விதர்பா ஆகிய இடங்களில் 20 மற்றும் 21-ம் தேதிகளில் இரவு நேர வெப்பநிலையும் அதிகமாக இருக்கும்.
இதனால் இரவில் தூக்கம் பாதிக்கப்படும்; உடல்நலக் கோளாறுகள் அதிகரிக்கும். வெப்ப அலை காரணமாக வயதானோர், குழந்தைகள், நீரிழிவு நோயாளிகள், இதயப் பிரச்னை உள்ளவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர். வெயிலில் வெளியே செல்ல வேண்டாம்; தண்ணீர் அதிகம் குடிக்கவும்; லேசான உடைகளை அணியவும்; நிழலில் தங்கவும் என IMD பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
விவசாயிகள், தொழிலாளர்கள் பகல் நேர வேலைகளை முடிந்தவரை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு ஏப்ரலிலேயே வெப்ப அலை தொடங்கியிருப்பது கவலை அளிக்கிறது. ஏப்ரல் 23-ம் தேதி மேற்கத்திய சீற்றம் (Western Disturbance) வரும் என எதிர்பார்க்கப்படுவதால், அதன் பிறகு சற்று நிம்மதி கிடைக்கலாம். எனினும், அடுத்த சில நாட்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு IMD வலியுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இன்னும் கத்திரியே தொடங்கல.. அதுக்குள்ளயா..!! 11 நகரங்களில் 100 டிகிரியை தாண்டிய வெயில்..!!