வீல் சேரில் வந்து போதைப்பொருள் கடத்தல்! சென்னை விமான நிலையத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!
தாய்லாந்திலிருந்து வீல் சேரில் சென்னைக்குக் கடத்தி வரப்பட்ட ரூ.3 கோடி மதிப்பிலான 3 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தாய்லாந்து நாட்டிலிருந்து மலேசியா வழியாக சென்னைக்குச் சக்கர நாற்காலியில் (Wheelchair) உடல்நலம் பாதிக்கப்பட்டவர் போல் நடித்து, உடமைகளுக்குள் மறைத்து வைத்துக் கடத்தி வரப்பட்ட சுமார் ₹3 கோடி சர்வதேச மதிப்பிலான அதிநவீன உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா போதைப்பொருளை சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் வழியாக சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த ஏர் ஏசியா பயணிகள் விமானத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து விமானத்தில் வந்திறங்கிய பயணிகளையும் அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர். அப்போது, 48 வயதுடைய இந்திய ஆண் பயணி ஒருவர் உடல்நலம் குன்றியவர் போல சக்கர நாற்காலியில் அமர்ந்து வந்துள்ளார்.
இதையும் படிங்க: 17.604 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகம் உடனே திறக்க வேண்டும்! உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு!
குடியுரிமை சோதனைகளை முடித்துக் கொண்டு உடமைகளை எடுத்துவந்த அந்த நபர், தன்னிடம் சுங்கத்தீர்வை செலுத்தக்கூடிய பொருட்கள் எதுவும் இல்லை எனக் கூறிவிட்டு 'கிரீன் சேனல்' வழியாகச் சக்கர நாற்காலியில் விரைவாக வெளியேற முயன்றுள்ளார். அவரது நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை இடைமறித்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, அவருக்குச் சக்கர நாற்காலியில் வரும் அளவிற்கு எவ்வித உடல்நலப் பாதிப்பும் இல்லை என்பதும், சோதனையில் இருந்து தப்புவதற்காகவே போலி ஆவணங்கள் மூலம் சக்கர நாற்காலி முன்பதிவு செய்து நாடகமாடியதும் அம்பலமானது.
இதனையடுத்து அவரைத் தனி அறைக்கு அழைத்துச் சென்று உடமைகளை முழுமையாகச் சோதனையிட்டபோது, பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6 பார்சல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றை உடைத்துப் பார்த்த அதிகாரிகளுக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது; அதில் 3 கிலோ எடையிலான உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு சுமார் ₹3 கோடியாகும். போதைப்பொருளைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், சர்வதேச போதைக்கடத்தல் கும்பலின் குருவியாகச் செயல்பட்ட அந்த நபரை உடனடியாகக் கைது செய்து, இந்தக் கடத்தலின் பின்னணியில் உள்ள முக்கிய நபர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஜல்லிக்கட்டை அவமதித்த தவெக எம்எல்ஏ! அலங்காநல்லூர் வாடிவாசலில் செப்.3-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்!