×
 

நான் மக்களின் சேவகன்! தரமணியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய மத்திய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான்!

சென்னை தரமணியில் உள்ள ஐஐடி ஆராய்ச்சி மையத்தில் இன்று நடைபெற்ற தென்னை விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்ற மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான், விவசாயிகளின் நலன் சார்ந்த பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

சென்னை தரமணியில் உள்ள ஐஐடி ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்ற தென்னை விவசாயிகள் மாநாட்டில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் இன்று கலந்துகொண்டார். தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்ற இந்த மாநாட்டில், தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

செய்தியாளர் சந்திப்பின் போது அமைச்சருக்கெனத் தனியாக உயரமாக வைக்கப்பட்டிருந்த சிறப்பு இருக்கையை அவர் நிராகரித்தார். நான் ராஜா இல்லை, நான் பொதுமக்களின் சேவகன் (I am not the king, I am a public servant) எனக் கூறி, மற்றவர்கள் அமரும் அதே சாதாரண இருக்கையிலேயே தானாக முன்வந்து அமர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். இது அங்கிருந்தவர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

குடும்ப அட்டைகளுக்கு (Ration Cards) வழங்கப்படும் பாமாயிலுக்குப் பதிலாகத் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்ற விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கை குறித்துப் பேசிய அமைச்சர், "இது தொடர்பாக மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. மாநில அரசுகளின் பதிலைப் பொறுத்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: “வெத்து வேட்டு”... விஜய் தேர்தல் அறிக்கையை கிழித்து தொங்கவிட்ட அமைச்சர் கீதா ஜீவன்...!

ஈரான் - அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக ஏற்பட்டுள்ள உரத்தட்டுப்பாடு குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதற்கு மாற்று வழிகளில் தீர்வு காண அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்தார்.

தேங்காய் உற்பத்தியில் உள்ள வெள்ளை பூச்சித் தாக்குதல் மற்றும் முதிர்ந்த மரங்களின் உற்பத்தித் திறன் குறைவு போன்ற பிரச்சனைகளைக் களையப் புதிய திட்டம் உருவாக்கப்பட உள்ளது. இதற்காக விவசாயிகளின் ஆலோசனைகளைப் பெற coconutbudget@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிக மகசூல் தரும் நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட புதிய தென்னை ரகங்கள், இயந்திரமயமாக்கல், மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்துத் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 7 மாநில விவசாயிகளுடன் அமைச்சர் விரிவாக ஆலோசித்தார்.

புயல் போன்ற இயற்கை இடர்பாடுகளின் போது தென்னை மரங்களுக்கான இழப்பீடு பெறுவது குறித்தும் மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழக உரிமையை பலிகடா ஆக்கிய திமுக... முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விளாசிய அண்ணாமலை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share