வெறும் 4 மணி நேரத்தில் LPG சிலிண்டர் டெலிவரி... இந்தியன் ஆயில் அறிமுகப்படுத்திய புதிய ‘Indane Xtralite Now’ சேவை!
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 10 கிலோ, 5 கிலோ வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டா் சேவையை அதன் தலைவா் ஏ.எஸ். சாஹ்னே அறிமுகப்படுத்தினாா்.
வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் பயன்பாட்டை மேலும் எளிமையாக்கும் வகையில் இந்தியன் ஆயில் நிறுவனம் புதிய முயற்சியை தொடங்கியுள்ளது. வாடிக்கையாளர்களின் வசதியை கருத்தில் கொண்டு, ‘இண்டேன் எக்ஸ்ட்ராலைட் நவ் (Indane Xtralite Now)’ என்ற பெயரில் 10 கிலோ மற்றும் 5 கிலோ எடையிலான இலகுரக எல்பிஜி சிலிண்டர் சேவையை இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் ஏ.எஸ். சாஹ்னே அறிமுகப்படுத்தினார்.
சென்னையில் நடைபெற்ற அறிமுக நிகழ்ச்சியில் பேசிய அவர், புதிய வகை சிலிண்டர்கள் குறைந்த எடையுடன், துருப்பிடிக்காத தன்மையிலும், பாதுகாப்பு அம்சங்களுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், சிலிண்டரில் எவ்வளவு எரிவாயு மீதமுள்ளது என்பதை எளிதாக அறிந்து கொள்ளும் வசதியும் இதில் இடம்பெற்றுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் சிலிண்டர் காலியாகும் நேரத்தை முன்கூட்டியே கணித்து திட்டமிட முடியும்.
இந்த புதிய சேவையின் முக்கிய அம்சமாக, முன்பதிவு செய்யப்பட்ட சிலிண்டர்கள் 4 மணி நேரத்துக்குள் வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்படும் என்று இந்தியன் ஆயில் அறிவித்துள்ளது. அதோடு, வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வசதியான நேரத்தை தேர்வு செய்து டெலிவரி பெறும் வசதியும், புதிய இணைப்புகளைப் பெற குறைந்த ஆவண நடைமுறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புதிய கல்வி அமைச்சராக பிரகலாத் ஜோஷி கூறிய முக்கிய தகவல்! கல்வித்துறையில் அடுத்த கட்ட நடவடிக்கை!
முதல் கட்டமாக புணே, குருகிராம், இந்தூர் மற்றும் கோவை ஆகிய நகரங்களில் இந்த சேவை தொடங்கப்படுகிறது. தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் முதல் மேலும் 25 நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படவுள்ள இந்த திட்டம், அக்டோபர் இறுதிக்குள் நாட்டின் முக்கிய நகரங்களிலும் அறிமுகமாகும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய இணைப்பு பெறவும், சிலிண்டர் முன்பதிவு செய்யவும் இந்தியன் ஆயில் செயலி மற்றும் இணையதளம் மூலம் வசதி செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் 75888 88824 என்ற வாட்ஸ்அப் எண்ணின் மூலமும் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் ஆயிலின் இந்த புதிய முயற்சி, வீட்டு எரிவாயு விநியோக சேவையை வேகமாகவும், பாதுகாப்பாகவும், வாடிக்கையாளர்களுக்கு அதிக வசதியுடனும் வழங்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, எடை குறைந்த சிலிண்டர்கள் முதியவர்கள் மற்றும் பெண்களுக்கு பயன்படுத்த எளிதாக இருக்கும் என்பதால், இந்த சேவைக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: டெல்லி போராட்டத்தில் கிரிமினல் குற்றவாளிகள்?! தீயாய் பரவும் வீடியோ! 2,500 பேரை அடையாளம் கண்டது போலீஸ்!