ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா போர்! இந்திய விமான நிறுவனங்களுக்கு பறந்த ஹை அலர்ட்!
மேற்காசியாவில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, ஈரான், சவுதி அரேபியா, யுஏஇ உள்பட 11 நாடுகளின் வான்வழியைத் தவிர்க்குமாறு இந்திய விமான நிறுவனங்களுக்கு விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேற்காசியாவில் அமெரிக்கா-இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெறும் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்திய விமான நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் (DGCA) இன்று வெளியிட்ட உத்தரவில், ஈரான், இஸ்ரேல், லெபனான், சவுதி அரேபியா, பஹ்ரைன், ஓமன், ஈராக், ஜோர்டான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார் மற்றும் குவைத் ஆகிய 11 நாடுகளின் வான்வழியை தவிர்க்குமாறு இந்திய விமான நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
போர் தொடங்கிய பிப்ரவரி 28 முதல் வளைகுடா பகுதியில் ஈரான் டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக துபாய், ஓமன் உள்ளிட்ட நாடுகளின் விமான நிலையங்களுக்கு அருகே தாக்குதல்கள் நடைபெற்றுள்ளதால், சிவில் விமானப் போக்குவரத்துக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிரதமர் மோடியே பீதியில இருக்காரு! மக்களை பயப்பட வேணாம்னு சொல்றாரு! ராகுல்காந்தி கிண்டல்!
இதையடுத்து, மார்ச் 28-ம் தேதி வரை இந்த 11 நாடுகளின் வான்பரப்பைப் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சவுதி அரேபியா மற்றும் ஓமன் வான்வழியில் பறக்கும் விமானங்கள் கடல் மட்டத்திலிருந்து 32,000 அடிக்குக் கீழே பறக்கக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விமானிகள் மற்றும் விமான நிறுவனங்கள், வான்வழி கட்டுப்பாடுகள் குறித்த NOTAM (Notice to Airmen) அறிவிப்புகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட பாதைகளில் பறக்கும் விமானங்கள் மேம்படுத்தப்பட்ட கண்காணிப்பு அமைப்புகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் DGCA அறிவித்துள்ளது.
இந்தப் போர் பதற்றம் காரணமாக ஏற்கெனவே பல சர்வதேச விமான நிறுவனங்கள் தங்கள் பாதைகளை மாற்றியுள்ளன. இந்திய விமான நிறுவனங்களும் இனி ஐரோப்பா, அமெரிக்கா, ஆசிய நாடுகளுக்கான பயணங்களில் நீண்ட சுற்றுப் பாதைகளைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பயண நேரமும், எரிபொருள் செலவும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஈரான் -இஸ்ரேல் , அமெரிக்கா போர்! மேற்காசியாவில் நிலவரம் என்ன? பார்லி.,யில் ஜெய்சங்கர் விளக்கம்!