இந்தியாவுக்கு ஜாக்பாட்! அந்நிய செலாவணி கையிருப்பு ரூ.69 லட்சம் கோடியாக உயர்வு – புதிய சாதனை
சந்தை நிலைத்தன்மையை பாதுகாக்க ரிசர்வ் வங்கி டாலர் விற்பனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் கையிருப்பில் சரிவு ஏற்பட்டது.
புதுடெல்லி: இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. ஆகஸ்டு 28-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 11.47 பில்லியன் அமெரிக்க டாலர் அதிகரித்து, இதுவரை இல்லாத அளவாக 740.80 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பு ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், இந்த உயர்வு பொருளாதார ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவலின்படி, அந்நிய செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமாக விளங்கும் வெளிநாட்டு கரன்சி சொத்துகள் 600.67 பில்லியன் டாலராக உள்ளன. இதன் மூலம் ஒட்டுமொத்த அந்நிய செலாவணி கையிருப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
முன்னதாக, பிப்ரவரி 27-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 728.494 பில்லியன் டாலராக இருந்தது. அதன் பின்னர் மத்திய கிழக்கில் ஏற்பட்ட பதற்றம் உள்ளிட்ட சர்வதேச காரணிகளால் சந்தைகளில் அழுத்தம் அதிகரித்தது. ரூபாய் மதிப்பில் சரிவு ஏற்பட்ட நிலையில், சந்தை நிலைத்தன்மையை பாதுகாக்க ரிசர்வ் வங்கி டாலர் விற்பனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் கையிருப்பில் சரிவு ஏற்பட்டது.
இதையும் படிங்க: சர்க்கரை விலை எகிறியதுக்கு எத்தனால் காரணமா? மத்திய அரசு திடீர் மறுப்பு! பரபரப்பு விளக்கம்!
இதற்கிடையே, அந்நிய செலாவணி சந்தையில் நிலைத்தன்மையை ஏற்படுத்தும் வகையில் ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. கடந்த ஜூன் மாதம் அறிவிக்கப்பட்ட சலுகை அடிப்படையிலான அந்நிய செலாவணி மாற்றுத் திட்டங்கள் மூலம் புதிய நிதி வரவுக்கு வழிவகுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் வாயிலாக 132 பில்லியன் டாலருக்கும் அதிகமான புதிய நிதி வரவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அந்நிய செலாவணி கையிருப்பில் தங்கத்தின் பங்களிப்பும் அதிகரித்துள்ளது. ஆகஸ்டு 28-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் தங்கத்தின் மதிப்பு 2.191 பில்லியன் டாலர் உயர்ந்து, 116.409 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில், சர்வதேச நிதியத்தில் உள்ள இந்தியாவின் கையிருப்பு 11 மில்லியன் டாலர் குறைந்து 4.914 பில்லியன் டாலராக உள்ளது.
இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு தொடர்ந்து வலுவாக இருப்பது, வெளிநாட்டு செலுத்துதல்கள் மற்றும் சர்வதேச சந்தை அதிர்வுகளை சமாளிக்கும் நாட்டின் திறனுக்கு முக்கிய ஆதரவாக பார்க்கப்படுகிறது. ரூபாய் மதிப்பு மற்றும் உலகளாவிய பொருளாதார சூழல் அடுத்தடுத்த மாதங்களில் எவ்வாறு நகர்கிறது என்பதையும் சந்தை வட்டாரங்கள் கவனித்து வருகின்றன.
இதையும் படிங்க: தமிழக கூட்டுறவு வங்கிகளுக்கு ஆபத்து? ரிசர்வ் வங்கி அனுமதி இருந்தும் அரசு செய்யாதது என்ன?