60 நாட்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் தயார்! எரிபொருள் இருப்பு குறித்து மத்திய அமைச்சர் உறுதி!
60 நாட்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் இந்திய அரசிடம் கையிருப்பு உள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
மேற்காசிய நாடுகளில் போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு குறித்து எழும் அச்சங்களைப் போக்கும் வகையில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இன்று முக்கியத் தகவல்களை வெளியிட்டுள்ளார். இந்தியத் தொழில் கூட்டமைப்பின் (CII) வருடாந்திர வர்த்தக உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அவர், நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பே இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் சவால்கள் இருந்தாலும், இந்தியா தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அமைச்சர் கூறினார். இந்திய எண்ணெய் நிறுவனங்களிடம் தற்போது 60 நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பில் உள்ளது. அதேபோல், 60 நாட்களுக்குத் தேவையான LNG எரிவாயுவும் பாதுகாப்பாக உள்ளது.
சமையல் எரிவாயுவைப் பொறுத்தவரை, 45 நாட்களுக்குத் தேவையான LPG கையிருப்பு உள்ளது. எனவே மக்கள் யாரும் பீதியடையத் தேவையில்லை. வளைகுடா போர் பாதிப்பால் சமையல் எரிவாயு விநியோகத்தில் சிக்கல் வராமல் தடுக்க, உள்நாட்டு உற்பத்தியைத் தினசரி 36,000 டன்னிலிருந்து 54,000 டன்னாக அரசு உயர்த்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எரிபொருள் விலை குறித்தும், அது தேர்தலுடன் தொடர்புபடுத்தப்படுவது குறித்தும் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது பாணியில் பதிலளித்தார்.
இதையும் படிங்க: ஹார்முஸ் நீரிணை மூடல்: எண்ணெய் சந்தையில் பெரும் அதிர்வு.. ரிலையன்ஸ் சுத்திகரிப்பு ஆலை தற்காலிக மூடல்..!!
கடந்த 4 ஆண்டுகளாக இந்தியாவில் எரிபொருள் விலையை உயர்த்தாமல் மத்திய அரசு சீராகப் பராமரித்து வருகிறது. ஆனால், எண்ணெய் விலை ஒருபோதும் உயர்த்தப்படாது என எங்கும் சொல்லவில்லை. சர்வதேச சந்தை நிலவரத்தால் எண்ணெய் நிறுவனங்களுக்கு (OMC) ஒரு நாளைக்குச் சுமார் 1,000 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாகவும், இது கவலைக்குரிய விஷயம் என்றும் அவர் குறிப்பிட்டார். எரிபொருள் விலை மாற்றத்திற்கும் தேர்தலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், அது முழுக்க முழுக்கச் சர்வதேச சந்தை மற்றும் விநியோகச் சங்கிலியைப் பொறுத்தது என்றும் அவர் விளக்கமளித்தார்.
வளைகுடா நாடுகளில் போர் பாதிப்பு இன்னும் முழுமையாக நீங்காத சூழலில், உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்தில் 20 சதவீதத்தைக் கொண்டுள்ள ஹார்மோஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) கடப்பதில் இப்போதும் சிக்கல்கள் நீடிப்பதை அமைச்சர் ஒப்புக்கொண்டார்.
இருப்பினும், பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய ‘எரிபொருள் சிக்கன’ வேண்டுகோள் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான் என்றும், நாட்டின் பொருளாதாரப் பாதிப்பைக் குறைக்க மக்கள் மெட்ரோ ரயில் மற்றும் மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவது நல்லது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: "இனி நல்லவனாக இருக்க மாட்டேன்": துப்பாக்கியுடன் புகைப்படம் பகிர்ந்து ஈரானுக்கு அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை!