ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய மாலுமிகளுக்கு தடை... மத்திய அரசின் திடீர் உத்தரவு; என்ன காரணம்?
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களில், இந்திய மாலுமிகளைப் பணியமர்த்துவதை உடனடியாக நிறுத்துமாறு, கப்பல் உரிமையாளர்கள், மேலாளர்கள் மற்றும் ஆட்சேர்ப்பு முகமைகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மேற்கு ஆசியாவில் மீண்டும் அதிகரித்து வரும் பாதுகாப்பு பதற்றத்தைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களில் இந்திய மாலுமிகளை புதிதாக பணியமர்த்துவதை உடனடியாக தவிர்க்குமாறு கப்பல் உரிமையாளர்கள், கப்பல் மேலாளர்கள் மற்றும் ஆட்சேர்ப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவுறுத்தலை இந்திய கடல்சார் நிர்வாக இயக்குநரகம் (DGMA) வெளியிட்டுள்ளது. சமீப நாட்களாக ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் அதை ஒட்டியுள்ள கடல் பகுதியில் வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், இந்திய மாலுமிகளின் உயிர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகின் மிக முக்கியமான கடல் வர்த்தக வழித்தடங்களில் ஒன்றாக ஹார்முஸ் ஜலசந்தி கருதப்படுகிறது. உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் பெரும்பகுதி இந்த வழித்தடம் மூலமாகவே கடத்தப்படுகிறது.
இதையும் படிங்க: ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படுமா? அதிரடி காட்டும் அதிபர் டிரம்ப் ... மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சம்!
எனவே, இந்த பகுதியில் ஏற்படும் எந்தவொரு பாதுகாப்பு பிரச்சினையும் சர்வதேச கப்பல் போக்குவரத்து மட்டுமல்லாமல், உலகளாவிய எரிபொருள் விநியோகத்தையும் பாதிக்கும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மேலும், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களில் ஏற்கனவே பணியில் உள்ள இந்திய மாலுமிகளின் பாதுகாப்பை தொடர்ந்து கண்காணிக்கவும், இந்தியர்கள் பணியாற்றும் கப்பல்கள் குறித்த தகவல்களை நிகழ்நேரத்தில் கண்காணிக்கவும் மத்திய அரசு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இந்திய கடற்படை, வெளியுறவுத்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன், கப்பல் நிறுவனங்கள் அரசு வெளியிடும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்றும், உறுதி செய்யப்படாத தகவல்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை பகிர வேண்டாம் என்றும் கடல்சார் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. பாதுகாப்பு சூழல் சீராகும் வரை இந்திய மாலுமிகளை ஆபத்தான கடல் பகுதிகளுக்கு அனுப்ப வேண்டாம் என்பதையும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் ஜலசந்தி! ஈரான் தாக்குதலுக்கு அமெரிக்கா பதிலடி! போர் பதற்றம்!