×
 

சோஷியல் மீடியா பயன்படுத்த வயது கட்டுப்பாடு!! செக் வைக்கும் மத்திய அரசு! அஸ்வினி வைஷ்ணவ் அதிரடி மூவ்!

சமூக வலைதளங்களைப் பயன்படுத்த வயது கட்டுப்பாடு விதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்று வரும் 'இந்தியா ஏஐ இம்பாக்ட் சமிட்' மாநாட்டில் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு வயது கட்டுப்பாடு விதிப்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

நேற்று (பிப்ரவரி 17) மாநாட்டில் பேசிய அமைச்சர், “ஏஐ தொழில்நுட்பம் மூலம் உருவாகும் டீப் ஃபேக் வீடியோக்கள் சமூகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளன. குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளம் வயதினரை இது மிகவும் பாதிக்கிறது. எனவே குழந்தைகளையும் சமூகத்தையும் இந்த ஆபத்திலிருந்து பாதுகாக்க கடுமையான சட்டங்கள் தேவை” என்று வலியுறுத்தினார்.

நெட்ஃப்ளிக்ஸ், யூடியூப், மெட்டா (ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்), எக்ஸ் (ட்விட்டர்) உள்ளிட்ட எந்த சமூக ஊடக நிறுவனமாக இருந்தாலும் இந்திய சட்டங்களுக்கு கட்டுப்பட வேண்டும் என்று அவர் தெளிவுபடுத்தினார். “சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கான வயது வரம்பு (age restriction) விதிப்பது குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களுடன் விரிவான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன” என்றும் கூறினார்.

இதையும் படிங்க: ரயில் திட்டங்களுக்கு நிதி?! மோடியிடம் ஸ்டாலின் கேட்ட கேள்வி! ப்ளேட்டை அப்படியே திருப்பி போட்ட அஸ்வினி வைஷ்ணவ்!

டீப் ஃபேக் தொடர்பாக பாராளுமன்ற குழு ஏற்கனவே விரிவான ஆய்வு மேற்கொண்டுள்ளது. இதனடிப்படையில் அனைத்து கட்சி எம்பிக்களின் ஒருமித்த கருத்தைப் பெற்று மிக கடுமையான சட்ட திருத்தங்கள் கொண்டு வரப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார். டீப் ஃபேக் மூலம் பெண்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மீது தவறான வீடியோக்கள் பரவுவது அதிகரித்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை மிக அவசியமானதாக கருதப்படுகிறது.

இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்தும் இளைஞர்கள், பெற்றோர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 13 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தற்போதே பல தளங்கள் கட்டுப்பாடு விதித்தாலும், 16 அல்லது 18 வயது வரை கடுமையான விதிமுறைகள் வருமா என்பது இப்போது பெரும் கேள்வியாக உள்ளது. அரசின் இந்த முயற்சி டிஜிட்டல் உலகில் பாதுகாப்பை உறுதி செய்யுமா அல்லது சுதந்திரத்தை பாதிக்குமா என்பது விவாதமாகி வருகிறது.

இதையும் படிங்க: சபரிமலை ரயில் பாதை! அங்கமாலி - எருமேலி!! கிரீன் சிக்னல் கொடுத்தது கேரள அரசு! ரூ. 3,800 கோடியில் திட்டம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share