பிரான்ஸ் அதிபர் மேக்ரான் இந்திய வருகை?! கையெழுத்தாகும் முக்கிய ஒப்பந்தம்! களமிறங்கும் அசூரன்!!
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், இம்மாத இறுதியில் இந்தியா வரவுள்ள நிலையில், அதற்கு முன் அந்நாட்டிடம் இருந்து, 114 'ரபேல்' போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தை இறுதி செய்ய ராணுவ அமைச்சகம் தீவிரம் காட்டி வருகிறது.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இந்த மாத இறுதியில் இந்தியா வரவுள்ள நிலையில், இந்திய விமானப்படைக்காக மேலும் 114 ரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தை இறுதி செய்ய ராணுவ அமைச்சகம் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த ஒப்பந்தம் நிறைவேறினால் இந்தியாவின் வான்பாதுகாப்பு வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே 2016-இல் இந்திய விமானப்படைக்காக 36 ரபேல் போர் விமானங்கள் பிரான்ஸிடமிருந்து வாங்கப்பட்டன. கடந்த ஆண்டு ஏப்ரலில் கடற்படைக்காக ரபேல்-எம் (Rafale-M) என்ற கடல்சார் போர் விமானமாக 26 எண்ணிக்கையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இப்போது விமானப்படையில் உள்ள போர் விமானங்களின் பற்றாக்குறையை ஈடுகட்டும் வகையில் மேலும் 114 ரபேல் விமானங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த முன்மொழிவுக்கு கடந்த மாதம் ராணுவத் துறை செயலர் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் வாரியம் (Defence Acquisition Council - DAC) ஆரம்பகட்ட அனுமதி வழங்கியது. இதற்கு அடுத்த கட்டமாக ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான DAC-யின் இறுதி ஒப்புதல் தேவை. பிரான்ஸ் அதிபர் மேக்ரான் வருகைக்கு முன்பாகவே இந்த DAC கூட்டம் நடைபெற உள்ளது. இதில் இறுதி ஒப்புதல் கிடைக்கும் என உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம்! நமக்கு என்ன லாபம்? உலகமே கவனிக்கும் டீல்! 12 முக்கிய அம்சங்கள்!!
இந்த 114 விமானங்களில் 18 விமானங்கள் நேரடியாக பிரான்ஸிலிருந்து வாங்கப்பட உள்ளன. மீதமுள்ள 96 விமானங்கள் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும். DAC ஒப்புதல் கிடைத்ததும் தொழில்நுட்ப பேச்சுவார்த்தைகள் மற்றும் வணிக ஒப்பந்த விவரங்கள் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஒப்பந்தம் நிறைவேறினால் இந்திய விமானப்படையின் போர் விமான பலம் கணிசமாக அதிகரிக்கும். ரபேல் விமானங்கள் தற்போது சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. மேலும் உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பதால் வேலைவாய்ப்பு, தொழில்நுட்ப மாற்றம், தன்னிறைவு ஆகியவை கிடைக்கும். பிரான்ஸ் அதிபர் வருகையின்போது இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டால், இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு மேலும் வலுப்பெறும்.
இந்தியாவின் தற்காப்பு திறனை மேம்படுத்தும் இந்த முடிவு நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. DAC கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாகும்! வரிகள் பூஜ்யமாகும்! இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்! பியூஸ் கோயல் நம்பிக்கை!