×
 

இந்தியா–பாகிஸ்தான் எல்லையில் 17 நாள் போர் பயிற்சி! இந்திய விமானப்படை அறிவிப்பால் அதிகரித்த பதற்றம்!

இந்தியாவின் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் அவசரக் கூட்டங்களை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

புதுடெல்லி: இந்தியா–பாகிஸ்தான் சர்வதேச எல்லையை ஒட்டிய பகுதிகளில் இந்திய விமானப்படை பயிற்சியில் ஈடுபட உள்ளதாக வெளியான அறிவிப்பு இரு நாடுகளிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. வரும் செப்டம்பர் 21-ம் தேதி முதல் அக்டோபர் 7-ம் தேதி வரை சுமார் 17 நாட்களுக்கு நடைபெற உள்ள இந்த பயிற்சிக்காக, குறிப்பிட்ட வான்வெளி தொடர்பான நோட்டம் அறிவிப்பை இந்திய விமானப்படை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படையின் அறிவிப்பின்படி, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சால்மர், பார்மர், பலோடி, ஜோத்பூர் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய வான்வெளியில் பயிற்சிகள் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. நல் மற்றும் பிகானீர் பகுதிகளும் பயிற்சி நடவடிக்கைகளுக்கான எல்லைக்குள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பகுதிகள் இந்தியா–பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கு அருகாமையில் அமைந்துள்ளதால், விமானப்படையின் பயிற்சி அறிவிப்பு பாதுகாப்பு வட்டாரங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. பயிற்சியின்போது குறிப்பிட்ட வான்வெளியில் அதிக உயரத்தில் விமானப்படை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு செக் வைத்த இந்தியா! ஆப்ரேஷன் சிந்தூருக்குப் பிறகு அடுத்த அதிரடி! மேலும் 5 S-400 வாங்க திட்டம்!

சுமார் 40 ஆயிரம் அடி உயரம் வரையிலான வான்வெளியில் பயிற்சிகள் நடைபெறக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த காலகட்டத்தில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் விமானப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஏற்பாடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

சமீப காலமாக இந்தியா–பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த பயிற்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது. குறிப்பாக, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின்னர் இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு சூழல் சர்வதேச அளவில் கவனிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, இந்திய விமானப்படையின் பயிற்சி அறிவிப்பை பாகிஸ்தானும் உன்னிப்பாக கவனித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் அவசரக் கூட்டங்களை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

எனினும், திட்டமிடப்பட்டுள்ள விமானப்படை பயிற்சி என்பது ராணுவத்தின் வழக்கமான பயிற்சி நடவடிக்கைகளில் ஒன்றாகவும் இருக்கலாம். இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரிக்கும் என உறுதியாக கூற முடியாது. பயிற்சியின் நோக்கம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் பட்சத்தில் கூடுதல் விவரங்கள் தெரியவரும்.

செப்டம்பர் 21 முதல் அக்டோபர் 7 வரை நடைபெற உள்ள இந்த நீண்டகால பயிற்சியை இந்தியா–பாகிஸ்தான் பாதுகாப்பு சூழலில் இரு நாடுகளும் எவ்வாறு அணுகுகின்றன என்பது சர்வதேச அளவில் கவனிக்கப்படும் விவகாரமாக மாறியுள்ளது.

இதையும் படிங்க: வெள்ளத்தில் சிக்கிய நேபாளத்திற்கு இந்தியா உதவிக்கரம்! 37.5 டன் நிவாரணப் பொருட்களுடன் புறப்பட்டது 2-வது விமானம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share