மீண்டும் மீண்டுமா? இதுக்கு இல்லையா சார் எண்டு? சுபான்ஷு சுக்லா விண்வெளி பயணத்தில் புது சிக்கல்..!
வரும் ஜூன் 22ம் தேதி செல்ல இருந்த இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா தலைமையிலான குழுவின் விண்வெளிப் பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
விண்வெளி ஆய்வுகளுக்காக பல ஆண்டுகளாக சர்வதேச விண்வெளி மையம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2030-ஆம் ஆண்டில் அதன் செயல்பாடுகளை நிறுத்த நாசா திட்டமிட்டுள்ளது. அதன் பிறகு ஆக்ஸியம் மையம் ஒன்று அங்கே உருவாக்கப்படுகிறது. மேம்பட்ட விண்வெளி ஆராய்ச்சி மையமாக அது இருக்கும். அந்த மையத்தின் கட்டுமானப் பணிகளுக்காக ஒவ்வொரு பொருட்களும் இங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டு சர்வதேச விண்வெளி மையத்தில் பொருத்தப்படும்.
ஆக்ஸியம் விண்வெளி மையம் முழுமையாக கட்டப்பட்ட பிறகு இந்த உபகரணங்கள் ஒன்றொன்றாக நீக்கப்பட்டு ஆக்ஸியம் மையத்துடன் இணைக்கப்படும். பிறகு சர்வதேச விண்வெளி மையத்தின் செயல்பாடு நிறுத்தப்படும். இதற்காக உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வீரர்கள் ஆக்ஸியம் 3 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக தற்போது ஆக்ஸியம் 4 திட்டத்தின் கீழ் ஆராய்ச்சியாளர்கள் அனுப்பப்படுகின்றனர்.
இந்த பணி அமெரிக்காவின் விண்வெளி பயண நிறுவனமான ஆக்ஸியம் ஸ்பேஸ் மற்றும் நாசாவின் உதவியுடன் மேற்கொள்ளப்படுகிறது. இது தவிர, எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனமும் இந்த பணியில் முக்கிய பங்கு வகிக்கும்.
இதையும் படிங்க: கலாமுடன் பணியாற்றிய முத்துவின் மறைவு வருத்தமளிக்கிறது.. முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல்..!
இதில், இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட அமெரிக்கா, ஹங்கேரி, போலந்து நாடுகளைச் சேர்ந்த நான்கு பேர் செல்கின்றனர். விமானப்படை விமானியான சுபான்ஷு சுக்லா தான் விண்வெளி நிலையத்திற்குச் செல்ல இருக்கிறார்.
உத்தரபிரதேசத்தின் தலைநகரான லக்னோவில் பிறந்த சுபன்ஷு சுக்லா, 2019 ஆம் ஆண்டில், சுபன்ஷு சுக்லா விங் கமாண்டர் பதவியை அடைந்து வரலாறு படைத்தார். போர் விமானங்களில் அவருக்கு 2000 மணி நேரத்திற்கும் மேலான அனுபவம் உள்ளது. மிக்-21, எஸ்யூ-30 எம்கேஐ, டோர்னியர், மிக்-29, ஜாகுவார், ஹாக், ஏஎன்-32 உள்ளிட்ட பல வகையான விமானங்களை அவர் ஓட்டியுள்ளார். இக்குழு, அங்கு 14 நாட்கள் தங்கி ஆய்வு நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1984 ஆம் ஆண்டு விண்வெளி பயணத்தை மேற்கொண்ட ராகேஷ் சர்மாவுக்குப் பிறகு விண்வெளிக்குச் செல்லும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையையும் சுபான்ஷு சுக்லா பெற உள்ளார்.
அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து, பால்கன் 9 ராக்கெட் வாயிலாக இன்று இக்குழு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 29ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்ல திட்டமிடப்பட்ட நிலையில், அப்பயணம் கடந்த 8ம் தேதிக்கு மாற்றப்பட்டது. எனினும், மோசமான வானிலை காரணமாக அத்திட்டமும் தள்ளிப்போனது. இதேபோல், கடந்த 11ம் தேதி ஏவ திட்டமிட்ட நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து, சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட குழுவினர் வரும் ஜூன் 22ம் தேதி புறப்படுவர் என, 'ஆக்சியம் ஸ்பேஸ்' நிறுவனம் அறிவித்து இருந்தது. தற்போது அதற்கும் தடைகள் வந்துள்ளது. வரும் ஜூன் 22ம் தேதி செல்ல இருந்த இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா தலைமையிலான குழுவின் விண்வெளிப் பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. மீண்டும் செல்லும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: பல விருதுகள்.. அப்துல் கலாமிடம் இருந்து பாராட்டு.. இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மறைவு..!