×
 

கடற்படையில் இணைந்தது ஐஎன்எஸ் தாராகிரி! இந்திய பெருங்கடலின் புதிய சிம்ம சொப்பனம்!

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற விழாவில் ஐஎன்எஸ் தாராகிரி போர்க்கப்பலை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் கடல்சார் வலிமையை உலகிற்குப் பறைசாற்றும் வகையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன 'ஸ்டீல்த்' (Stealth) போர்க்கப்பலான ஐஎன்எஸ் தாராகிரி (INS Taragiri - F41) இன்று இந்தியக் கடற்படையில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்த பிரம்மாண்டமான விழாவில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று இக்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

'மேக் இன் இந்தியா'வின் மைல்கல்லாக ப்ராஜெக்ட் 17A (Project 17A) திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட நான்காவது போர்க்கப்பல் இதுவாகும். மும்பையிலுள்ள மசாகன் டாக் ஷிப்பில்டர்ஸ் நிறுவனத்தால் கட்டப்பட்ட இந்த கப்பல், இந்தியாவின் 'ஆத்மநிர்பர் பாரத்' திட்டத்திற்கு ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. இக்கப்பலில் பயன்படுத்தப்பட்டுள்ள 75 சதவீதத்திற்கும் அதிகமான பாகங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டவை. சுமார் 200 சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இதன் கட்டுமானத்தில் பங்காற்றியுள்ளன. இமயமலைத் தொடரில் உள்ள 'தாராகிரி' மலைச்சிகரத்தின் பெயரே இக்கப்பலுக்குச் சூட்டப்பட்டுள்ளது. இது 1980 முதல் 2013 வரை கடற்படையில் பணியாற்றிய பழைய ஐஎன்எஸ் தாராகிரி கப்பலின் மறுபிறப்பாகக் கருதப்படுகிறது.

ஐஎன்எஸ் தாராகிரி வெறும் போர்க்கப்பல் மட்டுமல்ல, இது ஒரு மிதக்கும் கோட்டையாகும்.  'ஸ்டீல்த்' தொழில்நுட்பம் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளதால், எதிரி நாட்டு ரேடார்கள் மற்றும் சோனார் கருவிகளால் இக்கப்பலை எளிதில் கண்டறிய முடியாது. தரையிலிருந்து தரைக்குச் பாயும் அதிவேக பிரமோஸ் ஏவுகணைகள் மற்றும் வான்வழித் தாக்குதல்களை முறியடிக்க Barak-8 ஏவுகணைகளைக் கொண்டுள்ளது. கடலுக்கடியில் மறைந்திருக்கும் எதிரி நாட்டு நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறிந்து அழிக்கக்கூடிய நவீன சோனார் மற்றும் டார்பிடோ ஏவுகணைகள் இதில் உள்ளன. 6,670 டன் எடையும், 149 மீட்டர் நீளமும் கொண்ட இந்த கப்பல், 'CODOG' என்ற நவீன எரிபொருள் தொழில்நுட்பம் மூலம் மிக அதிவேகமாகச் செயல்படும் திறன் கொண்டது.

இதையும் படிங்க: நாட்டில் எரிபொருளுக்கு பற்றாக்குறை இல்லை..!! குட் நியூஸ் சொன்ன அமைச்சர் ராஜ்நாத் சிங்..!!

விழாவில் பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், தற்போதைய உலகளாவிய சூழலில், குறிப்பாக மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவின் கடல் எல்லையைப் பாதுகாப்பது மிக அவசியம். ஐஎன்எஸ் தாராகிரி இந்தியக் கடற்படையின் பலத்தை இருமடங்காக்கியுள்ளது. இது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் எனத் தெரிவித்தார்.

இந்தியாவின் கிழக்குக் கடற்படைப் பிரிவில் (Eastern Naval Command) இணைக்கப்பட்டுள்ள ஐஎன்எஸ் தாராகிரி, நாட்டின் கடல்சார் பாதுகாப்பில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது. சீனாவின் அதிகரித்து வரும் கடல் ஆதிக்கத்திற்கு இந்தப் புதிய போர்க்கப்பல் ஒரு வலுவான பதிலடியாகப் பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: தேர்தலுக்காக பலிகடா ஆக்காதீர்கள்!! வீடியோ வெளியிட்டு அண்ணாமலை கொடுத்த வார்னிங்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share