×
 

மத்திய கிழக்கில் போர் பதற்றம்!! பாதாளத்தில் பாஸ்மதி ஏற்றுமதி!! ஏற்ற, இறக்கத்தில் அரிசி விலை!

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதட்டமான போர் சூழல் காரணமாக ஈரானுக்கு சென்ற ஏற்றுமதிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மத்திய கிழக்கில் அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் இடையேயான போர் பதற்றம் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்தியாவிலிருந்து ஈரான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. 

குறிப்பாக பாஸ்மதி அரிசி ஏற்றுமதி மிகக் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது. விமானம், கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பணம் செலுத்துவதில் தாமதம், காப்பீட்டு பிரீமியம் உயர்வு உள்ளிட்ட பல இடையூறுகள் ஏற்பட்டுள்ளன.

இந்தியாவின் பாஸ்மதி அரிசி ஏற்றுமதியில் சுமார் 50 சதவீதம் சவுதி அரேபியா, ஈரான், ஈராக், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஏமன் ஆகிய 5 மேற்கு ஆசிய நாடுகளுக்கு செல்கிறது. ஈரான் ஒரு மிக முக்கிய சந்தையாக உள்ளது.

இதையும் படிங்க: மீண்டும் ஒரத்தநாட்டை குறிவைக்கும் வைத்திலிங்கம்..!! விருப்பமனு தாக்கல்..!

கடந்த 2025 ஏப்ரல்-டிசம்பர் காலகட்டத்தில் மேற்கு ஆசிய நாடுகளுக்கு ரூ.27,197 கோடி மதிப்பிலான பாஸ்மதி அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டது. இதில் ஈரானுக்கு மட்டும் ரூ.6,000 கோடி அளவுக்கு ஏற்றுமதி நடந்தது. தற்போது போர் சூழலால் இந்த ஏற்றுமதிகள் தேக்க நிலையில் உள்ளன. நிலைமை மேம்படும் வரை புதிய ஆர்டர்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்திய அரிசி ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு புதிய 'செலவு, காப்பீடு மற்றும் சரக்கு' உறுதிமொழிகளில் (CIF) நுழைவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது. நிலைமை மோசமடைந்தால் காப்பீட்டு பிரீமியங்கள் கடுமையாக உயரும் அபாயம் உள்ளது. புதிய ஆர்டர்களை முடிக்கும்போது நிதானமாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

போர் தொடர்ந்தால் பாஸ்மதி அரிசி மொத்த விலை மேலும் உயரும் வாய்ப்பு உள்ளது. கடந்த ஒரு மாதமாகவே விலை 10 முதல் 15 சதவீதம் உயர்ந்துள்ளது. பஞ்சாப், அரியானா மாநிலங்கள் மிகவும் பாதிக்கப்படும். இவ்விரு மாநிலங்களும் நாட்டின் மொத்த பாஸ்மதி ஏற்றுமதியில் சுமார் 75 சதவீதம் பங்களிக்கின்றன. விவசாயிகள், ஏற்றுமதியாளர்கள் பெரும் கவலையில் உள்ளனர்.

இந்தியா உலகின் முன்னணி அரிசி ஏற்றுமதியாளராக உள்ளது. உலக உற்பத்தியில் 70 சதவீதத்திற்கும் மேல் பாஸ்மதி அரிசி இந்தியாவிலிருந்து வருகிறது. ஆனால் தற்போதைய போர் சூழல் வர்த்தகத்தில் நீண்டகால உறுதியற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளது. அரசு, ஏற்றுமதியாளர்கள், விவசாயிகள் இணைந்து மாற்று சந்தைகளை தேட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. விரைவில் போர் நிறுத்தம் ஏற்பட்டு வர்த்தகம் சீராக வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

இதையும் படிங்க: ஆந்திராவை உலுக்கிய பட்டாசு ஆலை விபத்து சம்பவம்..!! எகிறும் பலி எண்ணிக்கை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share