ஈரானிய போர்க்கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்! மத்திய அரசு மௌனம் காப்பது ஏன்? காங்கிரஸ் கேள்வி!
இலங்கை அருகே ஈரானிய போர்க்கப்பல் IRIS Dena அமெரிக்காவால் மூழ்கடிக்கப்பட்ட விவகாரத்தில், மத்திய பாஜக அரசின் மௌனத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் மிக கடுமையாக சாடியுள்ளார்.
இந்திய பெருங்கடலில் இலங்கை அருகே ஈரானியப் போர்க்கப்பலான IRIS Dena-வை அமெரிக்கா தாக்கி மூழ்கடித்த விவகாரம், இந்திய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்தியாவின் நட்பு நாடான ஈரானின் கப்பல், இந்தியாவில் பயிற்சியை முடித்துவிட்டுத் திரும்பும்போது தாக்கப்பட்டும், மத்திய அரசு மௌனம் காப்பது குறித்துக் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தியக் கடற்படையின் MILAN 2026 பயிற்சியில் பங்கேற்ற ஒரு போர்க்கப்பல், இந்திய எல்லைக்கு அருகிலேயே தாக்கி மூழ்கடிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுகுறித்து மோடி அரசு இதுவரை எந்தவொரு கருத்தையும் தெரிவிக்காமல் மௌனம் காப்பது அதிர்ச்சியளிக்கிறது" என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். ஈரானில் சமீபத்தில் அரங்கேறியப் படுகொலைகள் (ஈரான் அதிபர் மற்றும் முக்கியத் தலைவர்கள் மீதானத் தாக்குதல்கள்) குறித்தும் மோடி அரசு வாய் திறக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்திய அரசு இதற்கு முன்பு இவ்வளவு பயந்த சுபாவத்துடனும், பலவீனமாகவும் இருந்ததே இல்லை. சர்வதேச விவகாரங்களில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது" என அவர் காரசாரமாக விமர்சித்துள்ளார். இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமெரிக்கா ஒரு போர்க்கப்பலை மூழ்கடித்திருப்பது பிராந்தியப் பாதுகாப்பிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை என்றும், இதில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: இந்திய பெருங்கடலில் ஈரான் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்! 100 வீரர்களுக்கு மேல் பலி!
1945-க்குப் பிறகு முதல் முறையாக அமெரிக்கா ஒரு டார்பிடோ (நீர்மூழ்கிக் குண்டு) மூலம் ஈரானின் IRIS Dena கப்பலைத் தாக்கி அழித்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், 32 பேரை இலங்கை கடற்படை மீட்டுள்ளது. இக்கப்பல் கடந்த மாதம் விசாகப்பட்டினத்தில் நடந்த கடற்பயிற்சியில் இந்திய வீரர்களுடன் இணைந்து செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஈரான் கப்பல் மீது அட்டாக்..!! இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா..?? மத்திய அரசு சொல்வது என்ன..??