நக்சல்களுக்கு எதிராக அதிரடி ஆபரேஷன்! ஜார்க்கண்டில் 6 நக்சல் தலைவர்களுக்கு போலீஸ் ‘வலை’.. ரூ.1 கோடி வெகுமதி!
கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இவர்களின் வெளிப்படையான நடமாட்டம் தொடர்பாக எந்த முக்கிய தகவலும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார். இதனால், போலீசாரின் தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், முக்கிய நக்சல் தலைவன் உட்பட 6 பேரை பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு மொத்தம் ரூ.1.34 கோடி வெகுமதி வழங்கப்படும் என்று மாநில போலீசார் அறிவித்துள்ளனர்.
ஜார்க்கண்டில் இந்த ஆண்டு தொடக்கம் முதல் நக்சல் அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் முக்கிய தலைவர்கள் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், ரூ.2.2 கோடி வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்த முக்கிய நக்சல் தலைவர்களான மிசிர் பெஸ்ரா மற்றும் ரவீந்திர கன்ஜு ஆகியோர் போலீசாரிடம் சிக்கினர். இதைத்தொடர்ந்து, தலைமையில் எஞ்சியுள்ள முக்கிய நபர்களை பிடிக்கும் நடவடிக்கையும் வேகப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சிபிஐ விசாரணை வேணும்... ஹேமந்த் சோரன் அரசுக்கு மாணவர்கள் அடுத்த நெருக்கடி... முதல் போராட்டம் வெற்றி...!
அந்த வகையில், முக்கிய நக்சல் தலைவராக கருதப்படும் ஆசிம் மொண்டலை கைது செய்ய உதவும் தகவலை வழங்குபவர்களுக்கு மட்டும் ரூ.1 கோடி வெகுமதி வழங்கப்படும் என்று ஜார்க்கண்ட் போலீசார் அறிவித்துள்ளனர். நக்சல் அமைப்பின் முக்கிய தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களில் கடைசி நபராக அவர் இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆசிம் மொண்டலுடன் மேலும் 5 பேருக்கும் வெவ்வேறு அளவுகளில் வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளது. 6 பேருக்கான மொத்த வெகுமதி தொகை ரூ.1.34 கோடியாகும். இவர்களில் சிலர் மேற்கு சிங்பும் பகுதியை விட்டு வெளியேறியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதுகுறித்து டிஎஸ்பி தயானந்த் குமார் கூறுகையில், தேடப்பட்டு வரும் நபர்கள் ஜார்க்கண்ட் எல்லையை ஒட்டிய மேற்கு வங்கத்தின் புருலியா, மேற்கு மிட்னாபூர் உள்ளிட்ட பகுதிகளில் பதுங்கியிருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.
கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இவர்களின் வெளிப்படையான நடமாட்டம் தொடர்பாக எந்த முக்கிய தகவலும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார். இதனால், போலீசாரின் தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேலும், தேடப்படும் நபர்கள் தொடர்பாக தகவல் தெரிந்த பொதுமக்கள் போலீசாரை தொடர்பு கொள்ளலாம் என்றும், தகவல் அளிப்பவர்களின் பெயர் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் தயானந்த் குமார் தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்டில் நக்சல் பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் பாதுகாப்புப் படைகள் மற்றும் மாநில போலீசார் இணைந்து மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக இந்த வெகுமதி அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேடப்படும் நபர்கள் குறித்த தகவல்களை சேகரிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: “மாணவர்களை நேரில் சந்தியுங்கள்! ஜார்க்கண்ட் போராட்டம்: ஹேமந்த் சோரனுக்கு ராகுல் திடீர் அழுத்தம்!