அமெரிக்காவில் போலீஸ் வாகனம் மோதி இந்திய மாணவி பலி!! ரூ.262 கோடி இழப்பீடு கொடுக உத்தரவு!!
அமெரிக்காவில் போலீஸ் வாகனம் மோதி உயிரிழந்த இந்திய மாணவியின் குடும்பத்துக்கு 29 மில்லியன் அமெரிக்க டாலர்( இந்திய மதிப்பில் 262 கோடி ரூபாய்) இழப்பீடு வழங்க அதிகாரிகள் ஒப்புக் கொண்டு உள்ளனர்.
அமெரிக்காவின் சியாட்டில் நகரில் 2023 ஜனவரி 23 அன்று நடந்த கொடூர சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது ஜானவி கண்டுலா, நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படித்து வந்தார்.
படிப்பை முடித்து பட்டம் பெறும் தருவாயில் இருந்த அவர், சவுத் லேக் யூனியன் பகுதியில் சாலையைக் கடந்தபோது அதிவேகமாக வந்த சியாட்டில் போலீஸ் ரோந்து வாகனம் மோதியது. 100 அடி தூரத்துக்கு தூக்கி எறியப்பட்ட ஜானவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
போலீஸ் அதிகாரிகளின் உடை கேமராவில் பதிவான காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. விபத்துக்குப் பிறகு போலீஸார் இறந்த மாணவியை கிண்டல் செய்யும் வகையில் பேசியது வெளியானது. இதனால் மனித உரிமை அமைப்புகள், இந்திய தூதரகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. விசாரணையில் ரோந்து வாகனத்தை ஓட்டிய போலீஸ் அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டார். 5,000 டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: உஷார் மக்களே.. நாளை முதல் மழை ஸ்டார்ட்..!! குளிரும் இருக்குமாம்..!! வானிலை அப்டேட்..!!
இதையடுத்து ஜானவியின் குடும்பத்தினர் 2024-ல் சியாட்டில் நகர நிர்வாகம் மற்றும் போலீஸ் துறை மீது 110 மில்லியன் டாலர் (சுமார் 900 கோடி ரூபாய்) இழப்பீடு கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீண்ட விசாரணைக்குப் பிறகு சியாட்டில் நகர அதிகாரிகள் இப்போது 29 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 262 கோடி ரூபாய்) இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளனர். காப்பீட்டு நிறுவனம் மூலம் இந்தத் தொகை செலுத்தப்பட உள்ளது. இதன்மூலம் வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.
சியாட்டில் நகரம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஜானவி கண்டுலாவின் மரணம் மிகவும் வேதனையளிக்கிறது. இந்த இழப்பீடு அவரது குடும்பத்துக்கு சில மாற்றங்களை ஏற்படுத்தும்” என தெரிவித்தார். ஜானவியின் குடும்பத்தினரோ அவரது வழக்கறிஞரோ இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
இந்திய மாணவர்களின் பாதுகாப்பு, வெளிநாட்டில் நீதி கிடைப்பது குறித்து இந்த வழக்கு முக்கிய விவாதத்தை எழுப்பியுள்ளது. ஜானவி கண்டுலா வழக்கு இந்திய-அமெரிக்க உறவுகளிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சியா? பெண்கள் மீதும் அடக்குமுறை...! சீமான் கண்டனம்..!