கடவுள் சொத்தில் கை வைத்தால் சும்மா விட மாட்டோம்! பூதாகரமாகும் சபரிமலை விவகாரம்! அமைச்சர் எச்சரிக்கை!
''சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும், கட்சி பாகுபாடு இல்லாமல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, கேரள தேவஸ்வம் போர்டு அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
கேரளா: பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலின் துவார பாலகர் சிலைகளில் இருந்து தங்கம் திருடப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கட்சி பாகுபாடு இல்லாமல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள தேவஸ்வம் போர்டு அமைச்சர் முரளிதரன் உறுதியளித்துள்ளார்.
சபரிமலை கோவிலில் நடைபெற்ற இந்த தங்கத் திருட்டு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் உன்னிகிருஷ்ணன் போத்தி என்பவர் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், முன்னாள் தேவஸ்வம் போர்டு அதிகாரிகளும் இந்த திருட்டுக்கு உடந்தையாக இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முந்தைய இடது ஜனநாயக முன்னணி அரசு, சில நபர்களை இந்த வழக்கில் இருந்து காப்பாற்ற முயற்சித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது கேரள அரசியலில் பெரும் பூதாகரமாக வெடித்திருந்தது. தற்போது பதவியேற்றுள்ள முதல்வர் சதீஷன் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு, இந்த விவகாரத்தை தீவிரமாகக் கையில் எடுத்துள்ளது.
இதையும் படிங்க: என்னது.. முதுகில் குத்தினோமா..!! தொடர்ந்து விமர்சித்தால் இதுதான் நடக்கும்..!! திமுகவை எச்சரித்த அமைச்சர்..!!
இதுகுறித்து தேவஸ்வம் அமைச்சர் முரளிதரன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: “கடவுளின் சொத்தை யார் திருடினாலும் சும்மா விட மாட்டோம். அது எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், எந்தப் பதவியில் இருந்தாலும் சரி, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிகள் எப்படியும் தப்பிக்க முடியாது. சிறப்பு புலனாய்வுக் குழுவின் அறிக்கை வரும் வரை காத்திருக்கிறோம். அறிக்கை வந்ததும் நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும்” என்றார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதால், கேரளாவில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. சபரிமலை போன்ற புனிதத் தலங்களில் நடக்கும் முறைகேடுகள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க அரசு உறுதியாக உள்ளது.
இதேபோல், சுகாதாரத் துறையையும் கவனித்து வரும் அமைச்சர் முரளிதரன், எபோலா வைரஸ் பரவல் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் தெரிவித்தார். “கேரளா முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் தீவிர சோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது” என்றும் அவர் கூறினார்.
சபரிமலை தங்கத் திருட்டு வழக்கில் புதிய அரசு எடுக்கும் நடவடிக்கைகள், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த வழக்கின் இறுதி முடிவு என்னவாக இருக்கும் என்பதை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
இதையும் படிங்க: கோவை கொடூரம்..! "தப்ப முடியாது"..! சிறுமி குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய அமைச்சர் சம்பத்குமார் வார்னிங்..!