பாக். அழகு கிரீம்களில் அதிக பாதரசம்.. சிறுநீரக பாதிப்புக்குள்ளான 18 பெண்கள்..!! இந்திய மருத்துவர்கள் வார்னிங்!!
“இந்த கிரீம்களைப் பரிசோதித்ததில் பாதரசத்தின் அளவு பாதுகாப்பான வரம்பை விட மிக அதிகமாக இருந்தது” என்றார்.
நாக்பூரில் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட வெண்மை கிரீம்களைப் பயன்படுத்திய பிறகு பல பெண்களுக்கு சிறுநீரகப் பிரச்சினை ஏற்பட்டதைத் தொடர்ந்து, மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) நாடு முழுவதும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோரீ பியூட்டி கிரீம் (Goree Beauty Cream) மற்றும் சாந்தினி/சாந்த்னி ஒயிட்டனிங் கிரீம் (Chandni Whitening Cream) ஆகியவை இந்தியாவில் இறக்குமதி செய்யவும் விற்பனை செய்யவும் அனுமதி பெறாதவை என்றும், அவற்றில் அனுமதிக்கப்பட்ட அளவை விட மிக அதிகமான கன உலோகங்கள் இருப்பதாகவும் அமைப்பு தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள அழகு சாதன விற்பனை மையங்கள், பியூட்டி பார்லர்கள் மற்றும் உள்ளூர் சந்தைகளில் இந்த கிரீம்கள் உரிய அனுமதியின்றி விற்பனை செய்யப்பட்டு வந்தன. மருத்துவர் பரிந்துரையின்றி வாங்கிப் பயன்படுத்திய 18 பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: ஆப்கான் மருத்துவ மாணவர்களுக்கு ஷாக்!! பாகிஸ்தானில் படிப்பை தொடர தடை, வெளியேற உத்தரவு!!
பரிசோதனையில் அவர்களின் உடலில் பாதரசம் (மெர்குரி) அனுமதிக்கப்பட்ட பாதுகாப்பான அளவை விட சுமார் 100 முதல் 105 மடங்கு அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டது. சில ஆய்வுகளில் இன்னும் அதிக அளவுகள் பதிவாகியுள்ளன. நாக்பூர் சிறுநீரகவியல் நிபுணர் டாக்டர் மோனாலி சாஹூ கூறுகையில், “இந்த கிரீம்களைப் பரிசோதித்ததில் பாதரசத்தின் அளவு பாதுகாப்பான வரம்பை விட மிக அதிகமாக இருந்தது” என்றார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு மெம்ப்ரேனஸ் நெஃப்ரோபதி (Membranous Nephropathy) எனும் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதனால் சிறுநீர் வழியாக அதிக அளவு புரதம் வெளியேறியது. மேலும் NELL-1 எனும் புரத ஆன்டிஜென் தொடர்பான அறிகுறிகளும் கண்டறியப்பட்டன. முகத்தில் அல்லது கால்களில் வீக்கம், நுரைத்த சிறுநீர், அதிக சோர்வு போன்ற அறிகுறிகள் தோன்றியுள்ளன. பாதரசம் தோல் வழியாக உறிஞ்சப்பட்டு உடலில் சேர்ந்து சிறுநீரகங்களைப் பாதிக்கிறது. இது நரம்பு மண்டலத்திற்கும் தீங்கு விளைவிக்கும்.
இந்த பொருட்கள் உள்ளூர் கடைகள் மூலமாகவும், மீஷோ போன்ற ஆன்லைன் தளங்கள் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் வழியாகவும் விற்பனை செய்யப்பட்டு வந்ததாக போலீஸ் மற்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) முன்னதாக இந்த கிரீம்களை ‘தரமற்றவை’ என அறிவித்து விற்பனையைத் தடை செய்துள்ளது.
CDSCO பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது: இந்த கிரீம்களை வாங்கவோ பயன்படுத்தவோ வேண்டாம். ஏற்கனவே பயன்படுத்தியவர்கள் மேற்கண்ட அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட, உற்பத்தி அனுமதி எண், தொகுப்பு எண், காலாவதி தேதி ஆகியவை கொண்ட பொருட்களையே வாங்கவும். அனுமதியற்ற அழகு சாதனப் பொருட்களைத் தவிர்ப்பது உடல்நலத்திற்கு அவசியம்.
இதையும் படிங்க: அசிம் முனீருக்கு கூடுதல் அதிகாரம்.. பாகிஸ்தானில் அமலுக்கு வந்த புதிய ராணுவ சட்டங்கள்!!