ரூ.2000 கோடிப்பே... தமிழ்நாடு அரசு தலையில் இடியாய் இறங்கிய செய்தி... சமாளிப்பாரா சி.எம்.விஜய்?
ஈரான்–அமெரிக்கா போர் பதற்றம் எதிரொலி: கிருஷ்ணகிரியில் மாம்பழக் கூழ் தேக்கம் – விவசாயிகள் வேதனை
ஈரான்–அமெரிக்கா போர் பதற்றத்தால் உலகளவில் ஏற்பட்டுள்ள தாக்கம் தமிழகத்தையும் பாதித்துள்ளது. தொடரும் பதற்றம் காரணமாக, கிருஷ்ணகிரியில் மாம்பழக் கூழ் (Mango Pulp) தேங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்றுமதி பாதிக்கப்பட்டதால் ஆண்டுக்கு சுமார் ரூ.2,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகளும் தொழில்துறையினரும் வேதனை தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் மாம்பழ உற்பத்திக்கு பெயர் பெற்ற மாவட்டமாக கிருஷ்ணகிரி விளங்குகிறது. ஆண்டுதோறும் சுமார் 35 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மாம்பழம் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு மல்கோவா, பெங்களூரா (பெங்கனப்பள்ளி), இமாம் பசந்த், தோத்தாபுரி, அல்போன்சா, மல்லிகா உள்ளிட்ட 14 வகையான பிரபல மாம்பழங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இவை தமிழகம் மட்டுமின்றி ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் அதிக அளவில் அனுப்பப்படுகின்றன.
தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் 2.5 லட்சம் முதல் 3 லட்சம் மெட்ரிக் டன் மாம்பழம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 1.5 முதல் 2 லட்சம் மெட்ரிக் டன் வரை மாம்பழக் கூழ் தயாரிப்பிற்காக பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் மாம்பழங்களில் சுமார் 80 சதவீதம் மாம்பழக் கூழ் தயாரிப்புக்கே அனுப்பப்படுகிறது.
இதையும் படிங்க: பழனி கோயில் நில மோசடி... சார்பதிவாளருக்கு நிபந்தனை ஜாமின்..! அதிரடி நடவடிக்கை..!!
ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக ஈரான்–இஸ்ரேல் போர், ரஷ்யா–உக்ரைன் போர் உள்ளிட்ட சர்வதேச மோதல்களின் தாக்கத்தால், கிருஷ்ணகிரியில் உள்ள 20-க்கும் மேற்பட்ட மாம்பழக் கூழ் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் பொருட்களின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, ஆண்டுதோறும் ஏற்றுமதி செய்யப்படும் சுமார் 1.5 லட்சம் மெட்ரிக் டன் மாம்பழக் கூழ் கிடங்குகளில் தேங்கி கிடக்கிறது.
தற்போது நாம் காண்பிக்கும் காட்சிகளில், கடந்த மூன்று ஆண்டுகளாக தயாரிக்கப்பட்ட மாம்பழக் கூழ் பேரல்களில் சேமித்து வைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். ஏற்றுமதி தடைப்பட்டதாலும், கப்பல் போக்குவரத்து செலவு அதிகரித்ததாலும், இந்தத் தொழில் கடுமையான நெருக்கடியை சந்தித்துள்ளது. இதன் காரணமாக, ஆண்டுக்கு சுமார் ரூ.2,000 கோடி அளவிற்கு வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், விவசாயிகளும் மாம்பழக் கூழ் உற்பத்தியாளர்களும் மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளாக மாம்பழக் கூழ் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. முன்பு ஆண்டுக்கு ரூ.2,500 முதல் ரூ.3,000 கோடி மதிப்பில் ஏற்றுமதி நடைபெற்றது. உள்நாட்டு சந்தையிலும் சுமார் ரூ.2,000 கோடி மதிப்பிலான வணிகம் நடைபெற்றது.
ஆனால் தற்போது உள்நாட்டு தேவையும் குறைந்துள்ளது. பழச்சாறு தயாரிப்பு நிறுவனங்கள் மாம்பழக் கூழ் கொள்முதலைக் குறைத்துள்ளதால், பெரிய அளவில் மாம்பழக் கூழ் தேங்கி கிடக்கிறது. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. போர் சூழ்நிலை காரணமாக கடல் மார்க்கக் கப்பல் கட்டணம் (Ocean Freight) மூன்று மடங்கு வரை உயர்ந்துள்ளது. இதனால் இந்தத் தொழில் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது.
இதையும் படிங்க: போராட்டக் களத்தில் எம்பி கனிமொழி..! மாணவர்களுக்கு ஆதரவு... பரபரக்கும் டெல்லி..!!