எங்களுக்கே விவசாயத்துக்கு தண்ணீர் இல்லை! அணை நிரம்புறப்போ திறந்து விடுறோம்! கர்நாடகா மீண்டும் மறுப்பு!
''கே.ஆர்.எஸ்., அணையில் இருந்து, விவசாயத்திற்கு திறக்க போதுமான தண்ணீர் இல்லை. கே.ஆர்.எஸ்., அணை நிரம்பும் போது, தமிழகத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்கும் என நம்புகிறேன்,'' என, கர்நாடகா நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி கூறினார்.
காவிரி நீர் விவகாரம் மீண்டும் முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், கே.ஆர்.எஸ். அணையில் தற்போது உள்ள நீர் இருப்பு விவசாயத்திற்கு திறந்து விடும் அளவுக்கு போதுமானதாக இல்லை என்று கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், தென்மேற்கு பருவமழையால் அணை முழுமையாக நிரம்பிய பிறகு தமிழகத்திற்கு தேவையான காவிரி நீர் கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
பெங்களூருவில் உள்ள விகாஸ் சவுதா அலுவலகத்தில் மாண்டியா, மைசூரு மற்றும் சாம்ராஜ்நகர் மாவட்டங்களைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு அமைச்சர் ராமலிங்கரெட்டி செய்தியாளர்களிடம் பேசியார்.
இதையும் படிங்க: ரூ. 134 கோடிக்கு சிறப்பு தொகுப்பு ஏமாற்று அறிவிப்பு! காவிரி நீர் திறக்காத பொய்க்கால் குதிரை அரசு! இபிஎஸ் கண்டனம்!
அப்போது, கே.ஆர்.எஸ். அணையில் தற்போது உள்ள நீர் இருப்பை வைத்து அடுத்த நான்கு மாதங்களுக்கு குடிநீர் தேவையை எந்த சிக்கலும் இல்லாமல் பூர்த்தி செய்ய முடியும் என்றாலும், பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடும் அளவுக்கு நீர் சேமிப்பு இல்லை என்று கூறினார்.
மேலும், மேகதாது அணைத் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாராக இருப்பதாகவும், இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் சுமார் 12 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி நீரில் மூழ்கும் என்றும் தெரிவித்தார். இந்த அணை கட்டப்பட்டால், பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்காக ஆண்டுதோறும் 7.5 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கும் என்றும் அவர் விளக்கமளித்தார்.
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டதாக வெளியான கருத்துக்கும் அமைச்சர் மறுப்பு தெரிவித்தார். "காவிரி நீரை திறக்கும்படி தமிழக அரசு எங்களிடம் கோரிக்கை வைக்கவில்லை என்று நான் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், நான் அப்படிப்பட்ட கருத்தை தெரிவிக்கவில்லை" என்று அவர் விளக்கம் அளித்தார்.
காவிரி நீர் திறப்பு தொடர்பான முடிவுகளை கர்நாடக அரசு தனிப்பட்ட முறையில் எடுக்க முடியாது என்றும், காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு காவிரி நீர் மேலாண்மை ஆணையமே இறுதி முடிவை எடுக்கும் என்றும் ராமலிங்கரெட்டி தெரிவித்தார்.
தற்போது காவிரி படுகையில் நீர் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கே.ஆர்.எஸ். அணை நிரம்பியதும் தமிழகத்திற்கு தேவையான தண்ணீர் வழங்கப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறினார். இதனால், காவிரி நீர் திறப்பு தொடர்பான அடுத்த கட்ட முடிவுகள் பருவமழையின் முன்னேற்றத்தைப் பொறுத்தே அமையும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: மேகதாது விவகாரம்... காங்கிரஸ் கட்சி போராடும்..! செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்..!