ஈரானை விட்டு வெளியேறுங்கள்... இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் அவசர எச்சரிக்கை!
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்து வருவதை அடுத்து, ஈரானில் வசிக்கும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) இன்று அவசர கால ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வரும் கடும் போர்ப் பதற்றம் மற்றும் ஈரானுக்குள் வெடித்துள்ள உள்நாட்டுப் போராட்டங்களைக் கருத்தில் கொண்டு, அங்குள்ள இந்தியர்கள் அனைவரும் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்திய வெளியுறவு அமைச்சகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இன்று (பிப்ரவரி 23) டெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் இது தொடர்பான புதிய பயண அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
ஈரானில் தங்கியுள்ள மாணவர்கள், யாத்ரீகர்கள், வணிகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் என அனைத்து இந்தியர்களும், வணிக ரீதியான விமானங்கள் உள்ளிட்டக் கிடைக்கும் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தி உடனடியாகப் புறப்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்துள்ள 10-15 நாட்கள் காலக்கெடு மற்றும் அமெரிக்கப் படைகளின் அதிகரிப்பு காரணமாகப் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. அதேசமயம், ஈரானுக்குள் அரசுக்கு எதிரான மாணவர் போராட்டங்கள் தீவிரமடைந்து வருவதும் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியுள்ளது.
இந்தியர்கள் போராட்டங்கள் அல்லது ஊர்வலங்கள் நடைபெறும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். பாஸ்போர்ட், அடையாள அட்டைகள் உள்ளிட்டப் பயண ஆவணங்களைக் கையில் தயாராக வைத்திருக்க வேண்டும்.
இதையும் படிங்க: அவசர அவசரமாக வெளியேறும் அமெரிக்க படைகள்..!! என்னதான் நடக்கிறது ஈரானில்..!! உச்சக்கட்ட பதற்றம்..!!
உள்ளூர் செய்திகளைத் தொடர்ந்து கண்காணிப்பதோடு, இந்தியத் தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இந்திய தூதரகம் கீழ்க்கண்ட அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது. கைபேசி எண்கள்: +989128109115, +989128109109, +989128109102, +989932179359. மின்னஞ்சல்: cons.tehran@mea.gov.in.
ஈரானில் உள்ள இந்தியர்கள் இன்னும் தூதரகத்தில் பதிவு செய்யவில்லை என்றால், உடனடியாகத் தூதரக இணையதளத்தில் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஈரானில் இணையச் சேவை துண்டிக்கப்பட்டால், இந்தியாவில் உள்ள அவர்களது குடும்பத்தினர் அந்தப் பதிவை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மிக மோசமான விளைவுகளைச் சந்திக்கும்...! ஈரானை எச்சரிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்!